2-வது நாளாக விநாயகர் சிலைகள் கரைப்பு


2-வது நாளாக விநாயகர் சிலைகள் கரைப்பு
x

மோகனூர் காவிரி ஆற்றில் நேற்று 2-வது நாளாக விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. இதையொட்டி பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

நாமக்கல்

விநாயகர் சிலைகள் ஊர்வலம்

நாமக்கல் நகரில் இந்து முன்னணியினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சதுர்த்தியையொட்டி சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. இதில் பொதுமக்கள் சார்பில் வைக்கப்பட்ட சிலைகள் நேற்றுமுன்தினம் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு மோகனூர் காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டது.

இந்து முன்னணி சார்பில் பலப்பட்டரை மாரியம்மன் கோவில், தட்டாரதெரு, குட்டைத்தெரு, கருப்பப்பட்டிபாளையம், தினசரி மார்க்கெட், சாவடி தெரு, பாவடி தெரு, செல்லப்பா காலனி உள்ளிட்ட 10 பகுதிகளில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் நேற்று 2-வது நாளாக ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு மோகனூர் காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன. முன்னதாக பலப்பட்டரை மாரியம்மன் கோவில் அருகே கொண்டு வரப்பட்ட சிலைகள் லாரிகளில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன.

இந்த ஊர்வலத்தை இந்து முன்னணி முன்னாள் மாவட்ட தலைவர் ராவணன் தொடங்கி வைத்தார். இதில் திருச்சி கோட்ட செயலாளர் போஜராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் தர்மதுரை, மாவட்ட பொதுச்செயலாளர் கோபிநாத், நகர செயலாளர் ரஞ்சித், பா.ஜனதா தேசியக்குழு உறுப்பினர் வக்கீல் மனோகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

காவிரி ஆற்றில் கரைத்தனர்

நாமக்கல் தட்டாரத்தெரு, மேட்டுத்தெரு, சேந்தமங்கலம் சாலை, பஸ்நிலையம், அண்ணாசிலை, பரமத்தி சாலை, கோட்டை சாலை, பிரதான சாலை முக்கிய சாலைகள் வழியாக ஊர்வலமாக சென்ற இந்து முன்னணியினர் பின்னர் மோகனூர் காவிரி ஆற்றில் 10 சிலைகளையும் கரைத்தனர்.

இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முன்எச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்கண்ணன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.


Next Story