மாவட்ட அளவிலான கலை உற்சவ போட்டிகள்


மாவட்ட அளவிலான கலை உற்சவ போட்டிகள்
x

மாவட்ட அளவிலான கலை உற்சவ போட்டிகள் பெரம்பலூரில் நடைபெற்றது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சார்பில் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான கலை உற்சவ போட்டிகள் பெரம்பலூரில் உள்ள மாவட்ட சாரணர் கூட்டரங்கில் நேற்று நடந்தது. போட்டிகளை மாவட்ட கல்வி அலுவலர்கள் அண்ணாதுரை (தொடக்க கல்வி), ஜெகன்நாதன் (இடைநிலை), கலாராணி (தனியார் பள்ளிகள்) ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர். ஏற்கனவே பள்ளி அளவில் மாணவ-மாணவிகளுக்கு படைப்பாற்றலை வளர்க்கவும், பாரம்பரிய கலைகளை இளம் தலைமுறையினரிடம் உயிர்ப்புடன் வைத்திருக்கவும், வாய்ப்பாட்டிசை, கருவியிசை, நடனம், காண் கலை மற்றும் நாடகம் ஆகிய 5 தலைப்புகளில் நடத்தப்பட்ட கலை உற்சவ போட்டிகளில் முதலிடம் பிடித்த மாணவ-மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, மாணவ-மாணவிகளுக்கு வாய்ப்பாட்டிசையில் செவ்வியல், பாரம்பரிய நாட்டுப்புற வகை, கருவியிசையில் தாளவாத்தியம், மெல்லிசை, நடனத்தில் செவ்வியல், பாரம்பரிய நாட்டுப்புற வகை, காண் கலையில் இரு, மூன்று பரிமாணங்கள், உள்ளூர் தொன்மை பொம்மைகள் விளையாட்டுகள், நாடகம் ஆகிய போட்டிகளில் தனித்தனியாக போட்டிகள் நடந்தது. இதில் மாணவ-மாணவிகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினா். நாடகம் மட்டும் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. போட்டிகள் இன்றும் (வியாழக்கிழமை) நடக்கிறது. மாவட்ட அளவிலான கலை உற்சவ போட்டிகளில் முதலிடம் பெறும் மாணவ-மாணவிகள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story