விளையாட்டு விடுதிகளில் சேருவதற்கு மாவட்ட அளவிலான தேர்வு: வருகிற 24-ந்தேதி நடக்கிறது


விளையாட்டு விடுதிகளில் சேருவதற்கு மாவட்ட அளவிலான தேர்வு: வருகிற 24-ந்தேதி நடக்கிறது
x

விளையாட்டு விடுதிகளில் சேருவதற்கு மாவட்ட அளவிலான தேர்வு வருகிற 24-ந்தேதி தொடங்கி நடக்கிறது.

கரூர்

விளையாட்டு விடுதிகள்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப நல்ல பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் மற்றும் விளையாட்டு பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. மாணவர்களுக்கான விளையாட்டு விடுதி மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கோவை, கடலூர், தஞ்சாவூர், அரியலூர், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், உதகமண்டலம், விழுப்புரம், சென்னை, நெய்வேலி மற்றும் நாமக்கல் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன.

மாணவிகளுக்கான விளையாட்டு விடுதி ஈரோடு, திருவண்ணாமலை, திண்டுக்கல், நாகர்கோவில், பெரம்பலூர், தேனி, புதுக்கோட்டை, தருமபுரி, சென்னை, மற்றும் நாமக்கல் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன. விளையாட்டு விடுதிகளில் உள்ள விளையாட்டுகளில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக விளங்குவதற்கு 7-ம் வகுப்பு, 9-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு சேர்க்கையும் முதன்மை நிலை விளையாட்டு மையங்களில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக விளங்குவதற்கு 6-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு ஆகிய வகுப்புகளில் சேர்க்கை நடைபெறும். மாவட்ட அளவிலான தேர்வு வருகிற 24-ந் தேதி கரூர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெற உள்ளது.

சேர்க்கை

மாணவர்களுக்கு தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கிரிக்கெட், கால்பந்து, வாள்சண்டை, ஜிம்னாஸ்டிக்ஸ், கைப்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், டேக்வாண்டோ, கையுந்துபந்து, கபடி, மேசைப்பந்து, டென்னிஸ், ஜூடோஸ், குவாஷ் மற்றும் வில்வித்தை பளுதூக்குதல் மற்றும் மாணவிகளுக்கு தடகளம். இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கால்பந்து, வாள்சண்டை, கைப்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், ஹாக்கி, நீச்சல், டேக்வாண்டோ, கையுந்துபந்து, கபாடி, டென்னிஸ், ஜூடோ, ஜிம்னாஸ்டிக்ஸ், ஸ்குவாஷ், வில்வித்தை பளுதூக்குதல் மற்றும் மேசைப்பந்து ஆகிய விளையாட்டுகளுக்கு சேர்க்கை நடைபெற உள்ளது. மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

தேர்வு போட்டிகள்

விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வமுள்ள விளையாட்டு விடுதி, முதன்மை நிலை விளையாட்டு மையங்களின் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப படிவத்தினை www.sdat.tn.gov.in என்ற இணையதள முவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்திடுவதற்கான கடைசி நாள் வருகிற 23-ந்தேதி மாலை 5 மணி ஆகும். ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும் தகவல்களுக்கு ஆடுகள தகவல் தொடர்பு மைய அலைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். விளையாட்டு விடுதி மற்றும் முதன்மை நிலை விளையாட்டு மையங்களில் சேர விரும்பும் மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான தேர்வு போட்டிகள் வருகிற 24-ந்தேதி காலை 7 மணியளவில் நடத்தப்பட உள்ளது. எனவே கரூர் மாவட்டத்தில் விளையாட்டில் ஆர்வமுள்ள விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.


Next Story