மாவட்ட வருவாய் நிர்வாக ஆய்வுக்கூட்டம்


மாவட்ட வருவாய் நிர்வாக ஆய்வுக்கூட்டம்
x

விழுப்புரத்தில் மாவட்ட வருவாய் நிர்வாக ஆய்வுக்கூட்டம் நில நிர்வாக ஆணையர் தலைமையில் நடந்தது.

விழுப்புரம்

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் ஈராண்டு தணிக்கை மற்றும் மாவட்ட வருவாய் நிர்வாக ஆய்வுக்கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நில நிர்வாக ஆணையர் நாகராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் மோகன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் நில நிர்வாக ஆணையர் நாகராஜன், நில எடுப்பு, பள்ளிக்கல்வித்துறை, சமூக பாதுகாப்பு திட்டம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, மாவட்ட வழங்கல் துறை, சமூகநலத்துறை ஆகிய துறைகளை சேர்ந்த அலுவலர்களிடம் தங்கள் துறை சார்ந்த திட்டங்களின் செயல்பாடுகள், முடிந்த பணிகள், நடைபெற்றுக்கொண்டிருக்கும் பணிகள், முடிந்த கோப்புகள் மற்றும் நடைமுறையில் உள்ள கோப்புகளின் விவரம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் விழுப்புரம் அருகே இளங்காடு கிராமத்தில் வீடின்றி வசித்து வரும் 29 இருளர் இன மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்.

அரசு பள்ளியில்...

அதனை தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் உள்ள நில எடுப்பு பிரிவில் நில நிர்வாக ஆணையர் நேரில் ஆய்வு மேற்கொண்டு, மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான நிலங்களின் விவரம், ஆக்கிரமிப்பு நிலங்களின் விவரம், ஏரி ஆக்கிரமிப்பு விவரங்கள், மீட்டெடுக்கப்பட்டுள்ள அரசு நிலங்களின் விவரங்கள் உள்ளிட்டவற்றை கேட்டறிந்ததுடன் மாவட்டத்தில் தற்போது வரை பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள வீட்டுமனை பட்டா தொடர்பான கோப்புகள், நில விவரங்கள் தொடர்பான கோப்புகள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் மற்றும் கணினி ஆய்வகங்கள், நூலகம், வகுப்பறைகளை நில நிர்வாக ஆணையர் நாகராஜன் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, திண்டிவனம் சப்-கலெக்டர் அமித், விழுப்புரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story