சேடல்டேம் குடியிருப்பு பகுதி மக்களுக்கு பட்டா வழங்குவது குறித்து மாவட்ட வருவாய் அதிகாரி ஆய்வு

சேடல்டேம் குடியிருப்பு பகுதி மக்களுக்கு பட்டா வழங்குவது குறித்து மாவட்ட வருவாய் அதிகாரி ஆய்வு
வால்பாறை
வால்பாறை அருகில் உள்ள சோலையாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியில் உள்ள சேடல் டேம், ஜேஜே நகர் உள்ளிட்ட நீர் நிலை புறம்போக்கு பகுதியில் பல ஆண்டுகளாக வீடுகள் கட்டி குடியிருந்து வரக்கூடிய பொது மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்குவதற்கான நடவடிக்கையை வருவாய் துறையினர் பொதுப்பணித்துறையினருடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் சேடல்டேம், ஜேஜே நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதியில் கோவை மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் நேரடி ஆய்வு மேற்கொண்டார். சோலையாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிக்கு மேல் புறத்தில் உள்ள குடியிருப்புக்கு மட்டும் பட்டா வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், பட்டா வழங்கப்பட வேண்டிய வீடுகள் அமைந்துள்ள இடங்களில் பொதுப் பணித்துறையின் நீர் ஆதார துறைக்கோ, வருவாய் துறைக்கோ ஏதாவது இடையூறுகள் உள்ளதா என்பது குறித்தும், இந்த பகுதியில் வாழ்ந்து வரக்கூடிய பொதுமக்கள் அனைவரும் பட்டா பெறுவதற்கு தகுதி உடையவர்களா? என்பது குறித்து ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, வால்பாறை நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி, வார்டு கவுன்சிலர்கள் இந்துமதி, அன்பரசன் மற்றும் மணிகண்டன், வால்பாறை தாசில்தார் ஜோதிபாசு, துணை தாசில்தார் செந்தில்குமார், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், பொதுப் பணித்துறையின் நீர் ஆதார துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.






