தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் என்னுடன் பேசி வருகிறார்கள்: எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேட்டி

தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் என்னுடன் பேசி வருகிறார்கள் என்று அ.தி.மு.க. இடைக்கால பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சென்னை:
அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கும்மிடிப்பூண்டியில் நடந்த அ.தி.மு.க. பிரமுகர் இல்ல காதணி விழாவில் கலந்துகொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் பேசியதாவது:-
பாசமுள்ள கட்சி அதிமுக. அன்போடு அழைத்ததால் நிகழ்ச்சியில் பங்கேற்றேன். தொண்டராக கலந்து கொண்டேன். தி.மு.க. எம்எல்ஏக்கள் 10 பேர் என்னுடன் பேசி வருகின்றனர். திமுக குடும்பக் கட்சி-கார்ப்பரேட் மாடல் எந்த பதவியுமே இல்லாத உதயநிதி ஸ்டாலின் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளை தொடங்கி வைக்கிறார். ராகுல்காந்தி காங்கிரசை வளர்க்க நடை பயணம் செல்கிறார் என கூறினார்
"சசிகலா, தினகரனை ஏற்றுக்கொள்வீர்களா?" என்ற கேள்விக்கு
அ.தி.மு.க. தொண்டர்களால் ஆன கட்சி. தொண்டர்கள் மட்டும்தான் அ.தி.மு.க. மற்றவர்களுக்கு இடம் இல்லை. தொண்டர் என்ற முறையில் தான் இங்கு வந்துள்ளேன் என பதில் அளித்தார்.
தொடர்ந்து அவர் கூறியதாவது:-
அதிமுக அலுவலகத்தில் திருடு போன சம்பவம் தொடர்பாக தற்போது சிபிசிஐடி விசாரணை காலம் தாழ்ந்த விசாரணை.
நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு கிடையாது. அதற்குரிய நடவடிக்கை எடுக்கின்ற முதல்-அமைச்சரும் தமிழகத்தில் கிடையாது. நீதிமன்றத்திற்கு சென்ற பின்பு தான் சிபிசிஐடி விசாரணை மேற்கொள்கின்றனர்.
பசியும் பட்டினியமாக உள்ள ஏழைகளுக்காக அம்மா உணவகம் ஏற்படுத்தப்பட்டது. அதனை மூடியவர்களுக்கு அடுத்த தேர்தலில் மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள். கொசஸ்த்தலை ஆற்றில் ஆந்திரா அரசு தடுப்பணை கட்டுவது கண்டிக்கத்தக்கது. விவசாயிகள் பாதிக்கக் கூடாது. குடிநீர் பாதிக்கக் கூடாது. அணை கட்டுவதை அரசு தடுக்க வேண்டும் என கூறினார்.