தி.மு.க. பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு


தி.மு.க. பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு
x

திருவண்ணாமலையில் தி.மு.க. பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பி ஓடிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் தி.மு.க. பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பி ஓடிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

தி.மு.க.நிர்வாகி

திருவண்ணாமலை கரியான்செட்டி தெருவை சேர்ந்தவர் சங்கர். தி.மு.க தொண்டரணி நகர துணை அமைப்பாளரான இவர் பைனான்ஸ் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு சங்கர் குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.

நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் சங்கர் வீட்டின் வெளிப்புறத்தில் பெட்ரோல் குண்டை வீசியுள்ளனர். அந்த குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து தீ பிழம்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த சங்கர் வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது வீட்டின் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த காரின் அருகில் தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி கூச்சலிட்டார்.

மேலும் பெட்ரோல் குண்டு வெடித்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சங்கர் வீட்டின் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது பெட்ரோல் குண்டு வீச்சினால் கார் சேதம் அடைந்தது. மேலும் திருவண்ணாமலை டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பைனான்ஸ் தொழிலில் அவருக்கு ஏற்பட்ட முன்விேராதம் காரணமாக யாரேனும் பெட்ரோல் குண்டு வீசினரா அல்லது வேறு என்ன காரணம் என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

2 பேர் தப்பி ஓட்டம்

மேலும் இது தொடர்பாக அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா பதிவுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அந்த பதிவில் 2 மர்ம நபர்கள் சங்கரின் வீட்டின் முன்பு இருந்து பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பி ஓடுவது போன்று காட்சிகள் பதிவாகி இருந்தது. அவர்கள் யார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து சங்கர் கொடுத்த புகாரின் பேரில் திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் திருவண்ணாமலை டவுன் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 12-ந் தேதி அதிகாலையில் 2 ஏ.டி.எம். மையங்களில் கொள்ளை சம்பவம் நடைபெற்றதால் ஏற்பட்ட பரபரப்பு இன்னும் அடங்காத நிலையில் தற்போது திருவண்ணாமலை நகரில் தி.மு.க. பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் திருவண்ணாமலை நகர பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story