மினி வேன் மோதி தி.மு.க. பிரமுகர் பலி


மினி வேன் மோதி தி.மு.க. பிரமுகர் பலி
x
தினத்தந்தி 2 Oct 2022 7:45 PM GMT (Updated: 2 Oct 2022 7:45 PM GMT)

நிலக்கோட்டை அருகே மினிவேன் மோதி தி.மு.க. பிரமுகர் ஒருவர் பலியானார்.

திண்டுக்கல்

நிலக்கோட்டை அருகே உள்ள கே.குரும்பபட்டியை சேர்ந்தவர் விமல்குமார் (வயது 32). கொத்தனார். நிலக்கோட்டை ஒன்றிய தி.மு.க. இளைஞரணி பொறுப்பாளராக இருந்து வந்தார். இவர் நேற்று மாலை அழகர்நாயக்கன்பட்டியில் தனது உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு செங்கட்டாம்பட்டி வழியாக நிலக்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது தோப்புபட்டி அருகே எதிரே வந்த ஒரு மினி வேன், விமல்குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த விமல்குமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே விமல்குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்த விமல்குமாருக்கு சசிகலா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். தற்போது சசிகலா 6 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். விமல்குமார் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.





Next Story