தேர்தல் வாக்குறுதி எதையும் தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை;முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு


தேர்தல் வாக்குறுதி எதையும் தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை;முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
x

தேர்தல் வாக்குறுதி எதையும் தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை என்று ஈரோட்டில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டினார்.

ஈரோடு

தேர்தல் வாக்குறுதி எதையும் தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை என்று ஈரோட்டில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டினார்.

575 வாக்குறுதிகள்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலையொட்டி அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஈரோடு கருங்கல்பாளையம் வண்டியூரான் கோவில் பகுதியில் தாம்பூல தட்டுடன் சென்று நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் அ.தி.மு.க. அரசின் சாதனைகளை பட்டியலிட்டு பொதுமக்களிடம் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார்.

முன்னதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த சட்டமன்ற தேர்தலின்போது தி.மு.க. 575 வாக்குறுதிகளை கூறி இருந்தது. ஆனால் இதுவரை எந்த வாக்குறுதிகளையும் தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை. அ.தி.மு.க. ஆட்சியின் போது கொண்டு வந்த அம்மா ஸ்கூட்டர், தாலிக்கு தங்கம், மடிக்கணினி, அம்மா கிளினிக், அம்மா சிமெண்டு உள்பட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டது.

இரட்டை இலை

மேலும் அ.தி.மு.க. ஆட்சியில் 11 மருத்துவ கல்லூரிகள் கொண்டுவரப்பட்டது. இதுபோன்று பல்வேறு நல்ல திட்டங்களை அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த நிலையில் தி.மு.க. அரசு பதவி ஏற்று சுமார் 20 மாதங்கள் ஆகியும் இதுவரை எந்த திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை. இதனால் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.

இந்த கோபம் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் பிரதிபலிக்கும். ஈரோட்டில் பொதுமக்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு அளிக்க தயாராகி விட்டனர். அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story