நல்ல கருத்துக்கள் யாரிடமிருந்து வந்தாலும் அதை திமுக அரசு செயல்படுத்தும் - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்


நல்ல கருத்துக்கள் யாரிடமிருந்து வந்தாலும் அதை திமுக அரசு செயல்படுத்தும் - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
x

சர்வாதிகாரமாக கருத்து தெரிவித்தால் அதை பின்பற்றவேமாட்டோம் என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

மதுரை,

மதுரை எஸ்.எஸ்.காலனியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு 586 பயனாளிகளுக்கு ரூ.93 லட்சம் மதிப்பிலான திட்டங்களை வழங்கி தொடங்கி வைத்தார்.

அதன் பின்னர் நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது:-

ஒரு சமுதாயத்திற்கு கலாச்சாரமும், மொழியும் எவ்வளவு முக்கியமோ, ஒரு இயக்கத்துக்கு கொள்கையும், தத்துவமும் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் ஒரு அரசுக்கு மனிதநேயமும், செயல்திறனும். கொள்கையை விடவும் மனிதநேயமும், செயல்திறனும் தான் ஒரு அரசியல்வாதிக்கு மிக முக்கியம்.

தமிழக அரசு செயல்படுத்தும் திட்டம் சரியாக அனைத்து மக்களுக்கு சென்று சேர்கிறதா என்பதே முக்கியம். இந்திய வரலாற்றிலேயே பொருளாதாரம், சட்டம், மனிதவளம் உள்ளிட்ட அனைத்து துறையிலும் சிறந்த மேலாண்மையை உருவாக்கி, உலகத்திலேயே சிறந்த ஆலோசகர்கள் அறிவுரையின் அடிப்படையில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது.

நல்ல கருத்துக்களை, மனிதநேயமிக்க அறிவுரைகளை யார் சொன்னாலும் அதை திமுக அரசு செயல்படுத்தும். ஆனால், சர்வாதிகாரமாக எங்களுக்கு தான் உரிமை, தகுதி உள்ளது என்பது போலும், நாங்கள் சொல்வதை தான் பின்பற்ற வேண்டும் எனும் அடிப்படையில் சொல்லும் அறிவுரைகளை ஒருபோதும் பின்பற்ற மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story