தந்தையின் கழுத்தை நெரித்து கொன்ற தி.மு.க. பிரமுகர்


தந்தையின் கழுத்தை நெரித்து கொன்ற தி.மு.க. பிரமுகர்
x

பண்ருட்டி அருகே முதியவர் மர்மமான முறையில் இறந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதில் தி.மு.க. பிரமுகரான அவரது மகன், கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது.

கடலூர்

பண்ருட்டி,

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த எல்.என்.புரத்தை சேர்ந்தவர் ராமு (வயது 69). சைக்கிள் பழுதுபார்க்கும் கடை வைத்திருந்தார். இவருக்கு பிரபாகரன், மகாலிங்கம், புருஷோத்தமன் (42) ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இதில் தி.மு.க. கிளை பிரதிநிதியான புருஷோத்தமன் குடும்பத்தினருடன் ராமு வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த மாதம் 24-ந்தேதி வீட்டின் பின்புறம் ராமு மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இது குறித்து புருஷோத்தமன் பண்ருட்டி போலீசில் புகார் அளித்தார். அதில் எனது தந்தையின் சாவில் சந்தேகம் உள்ளது. எனவே இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

அதன்பேரில் போலீசார், சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே ராமுவின் பிரேத பரிசோதனை முடிவில் அவர் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிந்தது.

குடும்ப பிரச்சினை

இதையடுத்து சந்தேகத்தின் பேரில் புருஷோத்தமனை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் ராமுவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இதில் புருஷோத்தமன் போலீசில் அளித்த பரபரப்பு வாக்குமூலத்தில் கூறியதாவது:-

எங்கள் வீடு வாய்க்கால் ஆக்கிரமிப்பில் உள்ளதால், எல்.என்.புரம் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் செல்வமணி என்பவர் வீட்டை அகற்ற முயற்சி செய்து வந்தார். இதன் காரணமாக அவர் மீது எனக்கு விரோதம் ஏற்பட்டது.

இதனிடையே எனக்கும், எனது தந்தைக்கும் அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதில் ஆத்திரமடைந்த நான் எனது தந்தையை கொலை செய்துவிட்டு பழியை செல்வமணி மீது போட திட்டமிட்டேன்.

அதன்படி சம்பவத்தன்று வீட்டின் முன்பு படுத்து தூங்கிக்கொண்டிருந்த எனது தந்தையின் கழுத்தை துண்டால் நெரித்து கொலை செய்தேன்.

செருப்பில் துண்டை தேய்த்தேன்

பின்னர் உடலை வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் போட்டேன். மேலும் இந்த கொலையில் செல்வமணியை சிக்க வைக்கும் வகையில், நான் எனது தந்தையை கொலை செய்ய பயன்படுத்திய துண்டை எடுத்து கொண்டு செல்வமணியின் வீட்டுக்கு சென்றேன். பின்னர் அங்கு கிடந்த செல்வமணியி்ன் செருப்பில் துண்டைதேய்த்தேன். இதையடுத்து அந்த துண்டை எடுத்து வந்து எனது தந்தையின் உடல் மீது போட்டேன்.

இவ்வாறு செய்தால், போலீசின் மோப்பநாய் செல்வமணி வீட்டுக்கு செல்லும். இதனால் போலீசார் சந்தேகப்பட்டு செல்வமணியை கைது செய்வார்கள் என கருதினேன். பின்னர் எதுவும் தெரியாதது போல் போலீசிலும் எனது தந்தை சாவு குறித்து புகார் அளித்தேன்.

இதனிடையே நான் நினைத்தபடி மோப்பநாயும் செல்வமணியின் வீட்டுக்கு சென்றது. அதனை தொடர்ந்து செல்வமணியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதனால் இந்த கொலை சம்பவத்தில் நான் தப்பித்து விடலாம் என்று நினைத்தேன். ஆனால் போலீசார் தீவிர விசாரணை நடத்தி என்னை கைது செய்துவிட்டனர்.

இவ்வாறு அதில் அவர் கூறியிருந்தார்.

தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story