டி.என்.ஏ. பரிசோதனை நடத்த அனுமதி கேட்ட மனு மீதான விசாரணை தள்ளிவைப்பு


டி.என்.ஏ. பரிசோதனை நடத்த அனுமதி கேட்ட மனு மீதான விசாரணை தள்ளிவைப்பு
x

வேங்கைவயல் சம்பவத்தில் சிறுவர்களுக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த அனுமதி கேட்ட மனு மீதான விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை

வேங்கைவயல் வழக்கு

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் அறிவியல் ரீதியான தடயங்களை சேகரிக்க 21 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனைக்கான ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு சென்னை தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் வேங்கைவயல் பகுதியை சேர்ந்த ஒரு சிறுவன், இறையூர் பகுதியை சேர்ந்த 3 சிறுவர்கள் என 4 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த அனுமதி கேட்டு புதுக்கோட்டை தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்ட கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி ஜெயந்தி முன்னிலையில் நடைபெற்றது.

விசாரணை தள்ளிவைப்பு

விசாரணைக்காக சிறுவர்களின் பெற்றோர் கோர்ட்டில் ஆஜராகிருந்தனர். இதில் வேங்கைவயல் பகுதியை சேர்ந்த சிறுவன் தரப்பில் ஆஜரான வக்கீல் டி.என்.ஏ. பரிசோதனைக்கு ஆட்சேபனை தெரிவித்தார். சி.பி.சி.ஐ.டி. போலீசார் தரப்பில் அரசு வக்கீல் வாதங்களை முன்வைத்தார்.

இந்நிலையில், சிறுவர்கள் பள்ளி சென்றதால் அவர்கள் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதையடுத்து விசாரணையை நீதிபதி ஜெயந்தி நாளை (வெள்ளிக்கிழமை) தள்ளி வைத்தார். மேலும் நாளை மாலை 4 சிறுவர்களையும், அவர்களது பெற்றோரையும் கோர்ட்டில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.

1 More update

Next Story