தவறான தகவல்களை பதிவு செய்திருந்தால் திருத்தம் செய்ய 3 நாட்கள் அவகாசம் டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
தவறான தகவல்களை பதிவு செய்திருந்தால் திருத்தம் செய்ய 3 நாட்கள் அவகாசம் டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு.
சென்னை,
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) பல்வேறு தேர்வுகளுக்கான விண்ணப்பங்களை இணையவழியில் பெற்றுவருகிறது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய விவரங்களை இணையவழியில் சமர்ப்பிக்கும்போது, அறியாமல் சில தகவல்களை தவறாக பதிவு செய்துவிடுகின்றனர். இதனால் ஒரு சில விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் நிலை ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க தேர்வாணையம், விண்ணப்பதாரர்கள் ஒரு குறிப்பிட்ட தேர்வுக்கென தங்கள் விண்ணப்பத்தில் சமர்ப்பித்த விவரங்களை, விண்ணப்பம் சமர்ப்பிக்க நிர்ணயிக்கப்பட்ட கடைசிநாள் வரை மாற்றிக்கொள்ள வழிவகை செய்துள்ளது.
கடைசிநாளில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் பல விண்ணப்பதாரர்கள் தங்களுடைய விண்ணப்பத்தில் மாற்றங்களை செய்ய போதுமான காலஅவகாசம் இல்லை என தெரிவித்துள்ளனர். அதைப் பரிசீலித்த தேர்வாணையம், அவ்வாறு விவரங்களை தவறாக சமர்ப்பித்த விவரங்களை மாற்றிக்கொள்ள மற்றொரு வாய்ப்பளிக்க முடிவு செய்துள்ளது.
அதன்படி, தேர்வாணையத்தால் இனிவரும் காலங்களில் வெளியிடப்படும் அறிவிப்புகளுக்கான இணையவழி விண்ணப்பங்களில், விண்ணப்பதாரர்கள் சமர்ப்பித்த விவரங்களை, விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசிநாள் வரை மாற்றிக்கொள்ள வாய்ப்பு அளிப்பதுடன், விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசிநாள் முடிந்தபின்னர் 4 நாட்கள் கழித்து, விண்ணப்ப தகவல்களை சரிபார்த்து மாற்றிக்கொள்ள 3 நாட்கள் வழங்கப்படும்.
இந்த 3 நாட்களில், விண்ணப்பதாரர்கள் தங்களுடைய விண்ணப்பத்தில் தகவல்களை தவறாக பதிவுசெய்திருந்தால், அதை மாற்றி சரியான தகவல்களை சமர்ப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் தங்களுடைய விண்ணப்பத்தை மீண்டும் ஒருமுறை சரிபார்த்துக்கொள்ளலாம்.
டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.