ரெயில்களில் குழந்தைகள் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுகிறார்களா?


ரெயில்களில் குழந்தைகள் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுகிறார்களா?
x
தினத்தந்தி 17 Jun 2023 6:45 PM GMT (Updated: 17 Jun 2023 6:45 PM GMT)

ரெயில்களில் குழந்தைகள் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுகிறார்களா? என அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

கடலூர்

குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள், கடைகள், வணிக வளாகங்கள், ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் குழந்தை தொழிலாளர்கள் பணிபுரிகிறார்களா? என ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் கடலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அரவிந்த் தலைமையில் குழந்தை தொழிலாளர் உதவி ஆய்வாளர் பழனிவேல், சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் முகுந்தன், குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் தாரகேஸ்வரி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் விமலா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஈஸ்வரி ஆகியோர் கடலூர் துறைமுகம் ரெயில்வே போலீசார் உதவியுடன் முதுநகர் ரெயில் நிலையத்தில் விழுப்புரம்-மயிலாடுதுறை இடையே இயக்கப்பட்ட ரெயில்களில் குழந்தைகள் யாரேனும் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுகிறார்களா? என பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மேலும் கடலூர் முதுநகர் பகுதிகளில் உள்ள கடைகளிலும் குழந்தை தொழிலாளர்கள் யாரேனும் வேலை செய்கிறார்களா? என ஆய்வு செய்தனர்.


Next Story