வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் சிகிச்சை குறித்து டாக்டர்கள் கருத்து


வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் சிகிச்சை குறித்து டாக்டர்கள் கருத்து
x

வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதற்கு சிகிச்சை, உணவுமுறை குறித்து டாக்டர்கள், பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கரூர்

புதுப்புது பெயர்களில் தோன்றும் புயல் போன்று தற்போது புதிய புதிய பெயர்களில் தினம் ஒன்றாக பொதுமக்கள் மத்தியில் காய்ச்சல் அறிமுகமாகி வருகிறது.

சுவாச தொற்று நோய்

உடல் வெப்ப நிலையை அதிகரிக்க செய்யும் இந்த வகை காய்ச்சல் சில நேரங்களில் வந்த சுவடே தெரியாமல் போய் விடுகிறது. பல நேரங்களில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உயிரை பறிக்கிற அளவுக்கு கோர முகத்தையும் காட்டுகிறது. இதனால்தான் வீடுகளில் குழந்தைகளுக்கு காய்ச்சல் என்றாலே பல அம்மாக்களுக்கு பீதி ஏற்படுகிறது.

காய்ச்சல் ஒரு சுவாச தொற்று நோய். இது மூக்கு, தொண்டை மற்றும் சில நேரங்களில் நுரையீரலை பாதிக்கும் 'இன்புளூயன்ஸா' என்ற வகை வைரசால் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

தசை வலி, சோர்வு, தலைவலி, இருமல் குறிப்பாக இரவில் அதிகரிக்கும் இருமல், மூக்கு ஒழுகுதல், தொண்டை புண், சோர்வு, மூச்சுத்திணறல் ஆகியவை முக்கிய அறிகுறிகளாகும். ஒரு சிலருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு கூட வரலாம் என்கின்றனர்.

வைரஸ் காய்ச்சல்

தமிழகத்தை பொருத்த வரையில் கடந்த 60 நாட்களாக வைரஸ் காய்ச்சல் காணப்படுகிறது. இது பெரியவர்களை விட குழந்தைகளில் அதிகம் காணப்படுவதாக டாக்டர்கள் கூறுகின்றனர். ஆஸ்துமா, நீரிழிவு நோய், புற்றுநோய் போன்ற நாட்பட்ட நிலைகளையும் இந்த வகை காய்ச்சல் மோசமாக்கிவிடுவதால் பொதுமக்களால் அஞ்சப்படுகிறது. பொதுவாக, உடலின் சராசரி வெப்பநிலையானது 98.6 டிகிரி பாரன்ஹீட். சிலருக்கு இதைவிட சற்று கூடவோ, குறைவாகவோ இருக்கலாம். வெப்பநிலையானது 100 டிகிரி வரை இருப்பது பிரச்சினையில்லை. அதை தாண்டினால்தான் கவலைப்பட வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.

வழக்கமாக காய்ச்சல் காலம் செப்டம்பரில் தொடங்கி நவம்பரில் உச்சத்தை எட்டும். டிசம்பர்-ஜனவரிக்கு பிறகு, நோயாளிகளின் எண்ணிக்கை மெதுவாக குறையும். ஆனால் இந்த ஆண்டு காய்ச்சல் சீசன் இன்னும் முடியவில்லை, தொடர்ந்து தொற்று பரவுகிறது.

நோயாளிகள் கூட்டம் அலைமோதல்

நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில், எச்1என்1 பாதிப்பு காணப்பட்டது. வாரங்கள் பல கடந்த நிலையில், எச்3என்2 மற்றும் 'இன்புளூயன்சா' பி வைரசால் பாதிக்கப்பட்டவர்களை காண முடிகிறது. இப்போது, ரைனோவைரஸ் மற்றும் ஆர்.எஸ்.வி. (சுவாச ஒத்திசைவு வைரஸ்) போன்ற வைரஸ்களின் கலவையும் பரவுகிறது. இதனால் சராசரியாக தனியார் ஆஸ்பத்திரியில் வெளிநோயாளிகள் பிரிவில் ஒரு நாளைக்கு 10 முதல் 15 நோயாளிகளையும், அவசரநிலையில் 10 நோயாளிகளும் வருகின்றனர்' என்று தொற்று நோய்கள் ஆலோசகர்களும் கூறுகின்றனர்.

வைரஸ் காய்ச்சல் காரணமாக ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் கூட்டம் அலைமோதுவதாக கூறப்படுகிறது.

2 பேர் பலி

நாடு முழுவதும் 'எச்3 என்2' வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில், இந்த காய்ச்சலுக்கு அரியானாவில் ஒருவரும், கர்நாடகாவில் ஒருவரும் பலியாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. எனவே காய்ச்சல் ஏற்பட்டால் உடனே டாக்டரை அணுக வேண்டும் என்று மத்திய அரசு வற்புறுத்தி உள்ளது. இதற்கிடையே வைரஸ் காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் நேற்று ஆயிரம் இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை சாதாரண காய்ச்சல் சிகிச்சைக்கு தினமும் சுமார் 10 முதல் 15 பேர் வரை சிகிச்சை பெறுவதாக மருத்துவத்துறை வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். தற்போது பரவிவருகிற வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இதுவரை யாருக்கும் ஏற்படவில்லை. இருப்பினும் அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. போதுமான மருந்து, மாத்திரைகள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த வைரஸ் காய்ச்சல் பாதிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளவை குறித்து டாக்டர்களும், பொதுமக்கள் தரப்பிலும் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-

முககவசம் அணிய வேண்டும்

தவுட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த இல்லத்தரசி பார்வதி:-

காய்ச்சல் அதிகமாக பரவி வருதால் தங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் வெளியில் செல்பவர்கள் கூட்டமாக இருக்கும் பகுதிக்குள் செல்லக்கூடாது. அதேபோல் வெளியூருக்கு சென்று திரும்புவர்கள் வீட்டிற்கு வந்ததும் இரு கைகளையும் சானிடைசர் போட்டு நன்றாக கழுவ வேண்டும்.

வீட்டை விட்டு வெளியே செல்லும்போது அவசியம் முககவசம் அணிந்தே செல்ல வேண்டும். தொற்று சம்பந்தமான விதிமுறைகளை தொடர்ந்து கடைபிடித்து வந்தால் காய்ச்சல் பரவுவதை தடுக்க இயலும். காய்ச்சல் உள்ளவர்கள் இருக்கும் இடத்தில் அருகில் சென்று நிற்கக் கூடாது.

அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும்

வெள்ளியணை அருகே உள்ள சின்னகுளத்துப்பட்டியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பால்ராஜ்:-

பருவநிலை மாற்றம் ஏற்படும்போது எல்லாம் மனிதர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகிறது. அந்த வகையில் கோடை காலம் தொடங்கும் தற்சமயம் புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக சுகாதாரத்துறை கூறியுள்ளது. எந்த சூழ்நிலையிலும், பரவக்கூடிய வைரஸ் வியாதிகளை எதிர்த்து போராடி, நோய் கிருமிகள் நம் உடம்பில் உள்நுழையா வண்ணம் இருக்கும் வகையில் நம் உடலை தயார்படுத்தி கொள்ள வேண்டும்.மேலும் நோய் எதிர்ப்பு சக்தி ஆற்றலை அதிகம் கொடுக்கும் உணவுகளையே அதிக அளவில் நாம் எடுத்து கொள்ள வேண்டும்.

உடலை சமநிலைப்படுத்துவதில் நீர்ச்சத்து என்பது முக்கிய பங்கு வகிப்பதால் சாதாரண நாட்களை விட, கோடை காலத்தில் அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். வைரஸ் காய்ச்சல் அறிகுறிகள் தெரிந்தால் நாமே மருந்து கடையில் சென்று மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவதை கைவிட்டு, அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தகுதியான தனியார் மருத்துவமனைகளை நாடி டாக்டர்களின் அறிவுரைப்படி உரிய மருந்துகளை எடுத்துக்கொண்டு காய்ச்சல் குணமாகும் வரை வீட்டிலேயே இருப்பது நமக்கும் நல்லது, நம் மூலம் பிறருக்கு பரவுவதை தடுக்கவும் அது உதவும்.

அச்சப்பட தேவையில்லை

கரூர் அரசு மருத்துவக்கல்லூரி டீன் சீனிவாசன்:-

கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இந்த சீதோஷ்ண நிலை காரணமாக மக்களுக்கு ஒருசில இடங்களில் ஏற்பட்டுள்ள காய்ச்சலுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. வெளிப்புற நோயாளிகளில் சாதாரண காய்ச்சல் காரணமாக ஒரு நாளைக்கு 10 முதல் 15 பொதுமக்கள் வருகின்றனர். அவர்களுக்கு சாதாரண காய்ச்சல் தான். சீதோஷ்ண நிலை காரணமாக ஏற்படக்கூடிய தொண்டை வலி, உடல் வலி, காய்ச்சல் தான் இருக்கிறது. வெளிப்புற நோயாளிகளாக வைத்தியம் பார்க்கும் நிலையில் தான் உள்ளனர். மருத்துவமனையில் சேர்த்து உள்நோயாளியாக மருத்துவம் பார்க்க வேண்டிய தேவை இல்லை. அவர்களுக்கு காய்ச்சல் 3 முதல் 5 நாட்களுக்குள் சரியாகி விடும். மக்கள் இந்த காய்ச்சலை பற்றி அச்சப்பட தேவையில்லை.

கூட்டம் அதிகம் உள்ள இடங்களுக்கு மக்கள் செல்வதை தவிர்க்க வேண்டும். கைகளை கழுவி சுத்தமான முறையிலும், சுகாதாரமான முறையிலும் இருக்க வேண்டும். தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். சுடிதண்ணீர் பருக வேண்டும். சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும். இவற்றை கடைப்பிடிப்பதன் மூலம் காய்ச்சலில் இருந்து பொதுமக்கள் தங்களை காத்து கொள்ளலாம். இதுபோன்று காய்ச்சல் உள்ளவர்கள் ஆரம்ப நிலையிலேயே மருத்துவமனையை அணுகி தேவையான மருத்துவ வசதியை செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு செய்துக்கொள்ளும் போது எவ்வித அச்சமும்பட தேவையில்லை. மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

தனியாக இருந்தால் நல்லது

கரூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் பிரியா:-

தற்போது ஏற்பட்டுள்ள காய்ச்சலுக்கு தாமாக மருந்துகளை எடுத்து கொள்ள கூடாது. காய்ச்சல் ஏற்பட்டால் மருத்துவர்களை சந்தித்து அவர்களின் ஆலோசனைப்படி தான் மருந்துகள் எடுத்து கொள்ள வேண்டும். உணவுமுறையை பொறுத்தவரை சூடான உணவுகளை உட்கொள்ள வேண்டும். தண்ணீரை நன்றாக காய்ச்சி குடிக்க வேண்டும்.

நமது இருப்பிடத்தையும், நம்மையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். சுகாதாரம் நமக்கு முக்கியம். கைகளை கழுவி சுத்தமாக இருக்க வேண்டும். முடிந்தவரை சளி, காய்ச்சல் இருந்தால் தனியாக இருந்து கொள்வது நல்லது. அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி மருத்துவரை சந்தித்து மருந்துகள் எடுத்து கொள்வது சிறந்தது. சீதோஷ்ண நிலை காரணமாக குளிர்ச்சியான உணவு பொருட்கள், குளிர்பானங்கள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.

சுத்தமாக வைக்க வேண்டும்

கரூரை சேர்ந்த டாக்டர் அருள்ஜோதி:-

தற்பொழுது கோடை காலம் தொடங்கி தட்பவெப்ப நிலை மாற்றம் ஏற்படுவதால் பரவலாக காய்ச்சல் வந்து கொண்டிருக்கிறது. இதுவும் ஒரு வகையான வைரஸ் தொற்றால் வரக்கூடிய காய்ச்சல் தான். இந்த காய்ச்சல் வந்தால் பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை. வீட்டில் இருந்தே சரி செய்து கொள்ளலாம் என்று நினைப்பதை விட உடனே அருகில் உள்ள மருத்துவரை நாடி மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை பெற வேண்டும். அவ்வாறு சிகிச்சை பெற்றால் ஒரு வாரத்திற்குள் குணமாகிவிடும். இதனால் பயப்பட வேண்டியது ஒன்றுமில்லை.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நமது வீடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சுத்தமாக வைக்க வேண்டும். சிரட்டை, டயர் போன்றவற்றில் நீர் தேங்கினால் கொசு உற்பத்தியாகும். இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது.மாஸ்க் அணிவது, கூட்டத்தில் செல்லாமல் இருப்பது, வெந்நீர்குடிப்பது நல்லது. உணவுகளைப் பொறுத்தவரை சத்தான காய்கறிகள், கீரை பழங்கள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் முட்டை, இறைச்சி வகைகள், பால், வைட்டமின் அடங்கிய உணவுகளை அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஐஸ்கிரீம், கூல்டிரிங்ஸ் போன்ற குளிர்பானங்களை தவிர்ப்பது நல்லது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story