ரெயில் தண்டவாளத்தில் நின்று செல்பி எடுக்க வேண்டாம்; மீறினால் கடும் நடவடிக்கை - ரெயில்வே போலீசார் எச்சரிக்கை


ரெயில் தண்டவாளத்தில் நின்று செல்பி எடுக்க வேண்டாம்; மீறினால் கடும் நடவடிக்கை - ரெயில்வே போலீசார் எச்சரிக்கை
x
தினத்தந்தி 4 July 2023 3:24 AM GMT (Updated: 4 July 2023 4:27 AM GMT)

ரெயில் தண்டவாளத்தில் நின்று செல்பி எடுக்க வேண்டாம் என்று ரெயில்வே போலீசார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

சென்னை,

தமிழக ரெயில்வே காவல் கண்காணிப்பாளர் பொன்ராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பூர் - வஞ்சிபாளையம் இடையே கடந்த 2-ம் தேதி ரெயில் தண்டவாளத்தில் இருவர் மதுபோதையில் செல்ஃபி எடுக்க முயன்றபோது, பிளாஸ்பூர் விரைவு ரெயிலில் அடிபட்டு அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். கடந்த மார்ச் 13-ம் தேதி வாழப்பாடி - ஏத்தாப்பூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞர் ஒருவர், ரெயிலில் அடிபட்டு இறந்தார். இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தீவிர விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.

தண்டவாளங்கள் ரெயில்கள் செல்வதற்கு மட்டுமே. தண்டவாளத்தைகடந்து செல்வது ரெயில்வே சட்டம் 147-ன்படி குற்றமாகும். ரெயில் தண்டவாளத்தில் நடந்து செல்வது, விளையாடுவது, விளம்பர மோகத்தில் செல்பி எடுப்பது போன்ற செயல்களால் பலர் உயிரை இழக்க நேரிகிறது. எனவே, இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம். மீறி செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story