வாக்காளர் பட்டியலை வீடு, வீடாக சென்று சரிபார்க்கும் பணி


வாக்காளர் பட்டியலை வீடு, வீடாக சென்று சரிபார்க்கும் பணி
x

பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் வீடு, வீடாக சென்று சரிபார்க்கும் பணி அடுத்த மாதம் 21-ந்தேதி வரை நடக்கிறது.

பெரம்பலூர்

வாக்காளர் பட்டியல்

இந்திய தேர்தல் ஆணைய அறிவுரையின்படி 1.1.2024 என்ற நாளை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்தல் தொடர்பாக சிறப்பு திருத்த பணிகள் 1.6.2023 முதல் தொடங்கப்பட்டு தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இச்சிறப்பு சுருக்கமுறை திருத்த நடவடிக்கையையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் 5.1.2024 அன்று வாக்காளர் பட்டியல் வெளியிட பல்வேறு முன் திருத்த நடவடிக்கைகளுக்கான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி 1.1.2024-ஐ தகுதியேற்பு நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாம்கள் நடத்தி வருகிற 5.1.2024 அன்று வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. வாக்காளர் பட்டியல் தொடர் திருத்த பணியின் முதல் நடவடிக்கையாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடி மைய பகுதியில் வசித்து வரும் அனைத்து வாக்காளர்களின் விவரங்களை கடந்த 21-ந்தேதி முதல் வீடு, வீடாக சென்று சரிபார்ப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

கள ஆய்வு

இந்த பணிகள் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 21-ந்தேதி வரை நடைபெறவுள்ளது. கள ஆய்வின் போது ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள மொத்த உறுப்பினர்கள், அவர்களில் எவ்வளவு பேர் வாக்காளர்களாக பதிவு செய்துள்ளார்கள். ஒவ்வொரு குடும்பத்திலும் விடுபட்டுள்ள வாக்காளர்களை கண்டறிந்து சேர்த்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சரிபார்ப்பு பணியானது வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் அனைவரும் தேர்தல் ஆணையத்தால் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள பி.எல்.ஒ. செயலி வழியாக மேற்கொள்ள உள்ளனர்.

வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களின் இல்லம் தேடி வரும் போது வாக்காளர்கள் தங்களது பெயர், வயது, புகைப்படம், முகவரி திருத்தம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள தெரிவிக்கலாம். மேலும் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்கவும், இறந்துபோன அல்லது நிரந்தரமாக புலம் பெயர்ந்த நபர்களை இனம் கண்டு நீக்கம் செய்திடலாம். எனவே பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பாகவும், விரைவாகவும் இப்பணியினை முடித்திடும் பொருட்டு பொதுமக்கள் தங்கள் வீட்டிற்கு கணக்கெடுப்பு பணிக்கு வரும் இப்பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் தங்களது கோரிக்கைகளை தெரிவித்து பயனடையலாம், என்று கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.


Next Story