மது குடிக்க பணம் கிடைக்காததால் விஷம் குடித்து டிரைவர் தற்கொலை

மது குடிக்க பணம் கிடைக்காததால் விஷம் குடித்து டிரைவர் தற்கொலை
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு அருகே உள்ள கொண்டம்பட்டி, முனியப்பன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் நாகசுப்பிரமணியம் (வயது 41). டிரைவர். இவருக்கு மூகாம்பிகா என்ற மனைவியும், 16 வயதில் ஒரு மகளும் உள்ளார். நாக சுப்பிரமணியத்துக்கு குடிப்பழக்கம் இருந்ததால் தினமும் குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். சம்பவத்தன்று குடிப்பதற்கு பணம் கிடைக்காததால் விரக்தி அடைந்த நாக சுப்பிரமணியம் வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார்.
இதனை கவனித்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஒத்தக்கால் மண்டபத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற நாகசுப்பிரமணியம் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர் ராமசுப்பிரமணியத்திற்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.