செல்போனில் வீடியோ வெளியிட்டு டிரைவர் தற்கொலை


செல்போனில் வீடியோ வெளியிட்டு டிரைவர் தற்கொலை
x

சேத்துப்பட்டில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி செல்போனில் வீடியோ வெளியிட்டு டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.

திருவண்ணாமலை

சேத்துப்பட்டு

சேத்துப்பட்டில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி செல்போனில் வீடியோ வெளியிட்டு டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.

டிரைவர்

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அண்ணா தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 37), டிரைவர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு வயதில் மகன் உள்ளனர்.

மணிகண்டன் சொத்து தகராறு காரணமாக இடத்தை அளக்கக்கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்துள்ளார். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் மணிகண்டன் மரத்தில் ஏறி தற்கொலைக்கும், மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்கவும் முயன்றுள்ளார்.

வீடியோ பதிவிட்டு தற்கொலை

இந்த நிலையில் சொத்து தகராறில் தீர்வு கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான மணிகண்டன் வீடியோ ஒன்றை பதிவிட்டு நேற்று தூக்குப்போட்டு தற்கொைல செய்து கொண்டார்.

அந்த வீடியோ பதிவில், எனக்கு அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, சம்பந்தப்பட்ட தாசில்தார், சர்வேயர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அதிகாரிகள் உள்பட முக்கிய பிரமுகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் இறந்த பிறகாவது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோல் யாருக்கும் நடக்கக்கூடாது என்று பதிவிட்டிருந்தார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து சேத்துப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புகார் மனு

இந்த நிலையில் மணிகண்டனின் மனைவி சுகன்யா அவரது உறவினர்களுடன் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து புகார் மனு அளித்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எனது கணவருக்கு சொந்தமான இடத்தில் இருந்து 2 சென்ட் நிலத்தை ஒருவர் ஆக்கிரமித்து உள்ளார். இது குறித்து அவரிடம் எனது கணவர் கேட்டபோது அவர் கொலை மிரட்டல் விடுத்தார்.

இது சம்பந்தமாக எனது கணவர் பலமுறை கலெக்டர் அலுவலகத்தில் முறையிட்டு உள்ளார். அப்போது இதுகுறித்து தாசில்தார் விசாரிப்பார் என்று கூறி அனுப்பினர்.

இதையடுத்து தாசில்தார், சர்வேயர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் பலமுறை இடத்தை அளக்க வருவதாக கூறிவிட்டு இடத்தை அளக்காமலேயே சென்றுவிட்டனர். இதுகுறித்து அவர்களிடம் கேட்ட போது அவர்கள் அலட்சியமாக திட்டினர்.

தண்டனை வழங்க வேண்டும்

இதற்கிடையில் ஆக்கிரமிப்பாளருக்கு ஆதரவாளர்கள் 2 பேர் எனது கணவருக்கு பலமுறை கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதுகுறித்து எனது கணவர் சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசாரும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது சம்பந்தமாக பலமுறை எனது கணவர் என்னிடம் சொல்லி அழுதுள்ளார்.

நேற்று நாங்கள் சோளிங்கருக்கு எனது தங்கை திருமணத்திற்கு சென்று விட்டோம்.

எனது கணவர் திருமணத்திற்கு வரவில்லை. வீட்டிலேயே இருந்தார்.

வீட்டில் இருந்த அவர் தற்கொலை செய்து கொண்டார். மேலும் எனது கணவரின் இந்த தற்கொலை முடவுிக்கு காரணமான அரசு அலுவலர்கள் உள்ளிட்டவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்க நடவடிக்கை எடுத்து எனக்கும், எனது குழந்தைக்கும் நீதி வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story