அந்தியூர் அருகே பவானி ஆற்றில் மூழ்கி டிரைவர் சாவு; நண்பர்கள் கண்முன்னே பரிதாபம்


அந்தியூர் அருகே பவானி ஆற்றில் மூழ்கி டிரைவர் சாவு; நண்பர்கள் கண்முன்னே பரிதாபம்
x

அந்தியூர் அருகே நண்பர்கள் கண்முன்னே பவானி ஆற்றில் மூழ்கி டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஈரோடு

அந்தியூர்

அந்தியூர் அருகே நண்பர்கள் கண்முன்னே பவானி ஆற்றில் மூழ்கி டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சரக்கு ஆட்டோ டிரைவர்

அந்தியூர் அருகே உள்ள கெட்டிசமுத்திரம் ஜே.ஜே.நகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருடைய மகன் பார்த்திபன் (வயது 18). சரக்கு ஆட்டோ டிரைவர்.

இந்தநிலையில் பார்த்திபன் நேற்று தன்னுடைய நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த லட்சுமணன், மணிகண்டன் ஆகியோருடன் அத்தாணி ஆற்றுப்பாலம் அருகே செல்லும் பவானி ஆற்றில் குளிக்க சென்றார்.

சுழலில் சிக்கினார்

ஆற்றில் குளித்தபோது பார்த்திபன் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது தண்ணீரின் சுழலில் சிக்கிய அவர் காப்பாற்றுமாறு சத்தம் போட்டார். ஆனால் அவருடைய நண்பர்களால் பார்த்திபனை காப்பாற்ற முடியவில்லை. அதனால் தண்ணீரில் மூழ்கினார்.

உடனே இதுகுறித்து அந்தியூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ஆற்றில் இறங்கி தேடினர். இதில் பார்த்திபனின் உடலைத்தான் மீட்க முடிந்தது.

சோகம்

இதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் பார்த்திபனின் உடலை கரைக்கு கொண்டுவந்து, ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசார் பார்த்திபனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நண்பர்கள் கண்முன்னே பவானி ஆற்றில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story