பருத்தி செடிகளுக்கு டிரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணி


பருத்தி செடிகளுக்கு டிரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணி
x
தினத்தந்தி 4 Aug 2023 6:45 PM GMT (Updated: 4 Aug 2023 6:45 PM GMT)

சீர்காழி அருகே பருத்தி செடிகளுக்கு டிரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணியை கலெக்டர் மகாபாரதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை

சீர்காழி:

சீர்காழி அருகே பருத்தி செடிகளுக்கு டிரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணியை கலெக்டர் மகாபாரதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மருந்து தெளிக்கும் பணி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே எடக்குடி வடபாதி ஊராட்சியில் ராதாகிருஷ்ணன் என்பவர் வயலில் சாகுபடி செய்யப்பட்ட பருத்தி செடிகளில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் டிரோன் மூலம் மருந்து தெளிப்பு பணி நடைபெற்று வருகிறது.

இந்த பணியினை மாவட்ட கலெக்டர் மகாபாரதி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வேளாண் துறை அதிகாரிகளிடம் டிரோன் மூலம் மருந்து தெளிப்பதற்கு ஏக்கருக்கு எவ்வளவு செலவு ஆகிறது என்ற விவரங்களை கேட்டறிந்தார். அதற்கு ஏக்கருக்கு ரூ.600 செலவாகும். இது விவசாயிகள் கைத்தெளிப்பான் மூலம் மருந்துகளை தெளித்தால் கூடுதலாக ரூ.1,200 செலவாகும் என்ற விவரங்களை தெரிவித்தனர்.

விதை நேர்த்தி

இதனைத் தொடர்ந்து வைத்தீஸ்வரன் கோவில் துணை வேளாண்மை விரிவாக்க மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் விதை சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள விதைகளை ஆய்வு செய்தார். விதை நேர்த்தி எவ்வாறு செய்யப்படுகிறது என்று விவரங்களையும் கேட்டறிந்தார்.

மேலும் தேவையான அளவு விதை கையிருப்பு உள்ளதா?என்று விவரங்களையும் கலெக்டர் கேட்டறிந்தார்.

தென்னாலகுடி கிராமத்தில் உள்ள உதவி வேளாண்மை விரிவாக்க அலுவலகத்தை பார்வையிட்டார்.

உழவர் சந்தை

பின்னர் சீர்காழி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள உழவர் சந்தைக்கு நேரில் வந்து பதிவிட்டு ஆய்வு செய்தார். அங்கு தமிழிசை மூவர் உழவர் உற்பத்தியாளர் நிர்வாக துறை சார்பில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பொருட்களை பார்வையிட்டு பொருட்களின் விவரங்களை கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சேகர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜெயபாலன், உதவி இயக்குனர் ராஜராஜன், சீர்காழி தாசில்தார் செந்தில்குமார், வேளாண்மை அலுவலர் சுகன்யா, துணை வேளாண்மை அலுவலர் ரவிச்சந்திரன், அட்மா சங்க நிர்வாகிகள் பார்க்கவி, ராஜசேகர், உதவி வேளாண்மை அலுவலர் ராமச்சந்திரன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராஜகோபால் உள்பட பலர் உடன் இருந்தனர்.

கோரிக்கை மனு

முன்னதாக ஊராட்சி மன்ற தலைவர் அஞ்சம்மாள் மணி மாவட்ட கலெக்டரிடம் ஊராட்சியில் சேதம் அடைந்த நிலையில் உள்ள சுடுகாட்டுக்கு செல்லும் சாலைகள், மயான கொட்டகைகள், கல்வெட்டுக்கள், சாலைகள் உள்ளிட்டவைகளை சீரமைத்து தரக்கோரி கோரிக்கை மனுவை வழங்கினார்.


Next Story