ஒப்பந்த பணிகளுக்கு 'இ-வங்கி' உத்தரவாதம்: புதிய நிபந்தனையை எதிர்க்கும் வழக்கிற்கு பதில் அளிக்க வேண்டும் - நெடுஞ்சாலைத்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவு


ஒப்பந்த பணிகளுக்கு இ-வங்கி உத்தரவாதம்: புதிய நிபந்தனையை எதிர்க்கும் வழக்கிற்கு பதில் அளிக்க வேண்டும் - நெடுஞ்சாலைத்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவு
x

ஒப்பந்த பணிகளுக்கு ‘இ-வங்கி’ உத்தரவாதம் தொடர்பாக புதிய நிபந்தனையை எதிர்க்கும் வழக்கிற்கு பதில் அளிக்க வேண்டும் என நெடுஞ்சாலைத்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

ஒப்பந்த பணிகளுக்கு 'இ-வங்கி உத்தரவாதம்' அளிக்க வேண்டும் என்ற புதிய நிபந்தனையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கிற்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டில், ஒரு நிறுவனம் சார்பில் அதன் இயக்குநரான முத்துக்குமாரசுவாமி தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எங்களது நிறுவனம் தேசிய நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் ஒப்பந்தப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. எந்த அரசு துறைகளில் ஒப்பந்தம் எடுப்பதாக இருந்தாலும் ஒப்பந்த மதிப்பில் ஒரு சதவீத தொகையை முன்வைப்புத் தொகையாக வங்கி வரைவோலையாகவோ அல்லது நிரந்தர வைப்புத் தொகையாகவோ அல்லது வங்கி உத்தரவாதமாகவோ அளிக்கும் நடைமுறை இதுவரை பின்பற்றப்படுகிறது.

ஆனால், தற்போது தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் கோரப்படும் அனைத்து ஒப்பந்த பணிகளுக்கும் ஒப்பந்ததாரர்கள் முன்வைப்பு தொகையை 'இ-வங்கி' உத்தரவாதம் மூலமாக மட்டுமே செலுத்த வேண்டுமென புதிதாக நிபந்தனை விதி்க்கப்பட்டுள்ளது.

இந்த இ-வங்கி உத்தரவாத நடைமுறை பல வங்கிகளில் இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லை. குறிப்பிட்ட ஒரு சில வங்கிகளில் மட்டுமே செயல்பாட்டில் உள்ளது. இதனால் தேசிய நெடுஞ்சாலைத்துறை டெண்டர்களில் பங்கேற்க விரும்பும் தகுதியான ஒப்பந்ததாரர்கள் இந்த புதிய நடைமுறையினால் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த புதிய நடைமுறை ஒப்பந்த பணிகளுக்கான வெளிப்படைத்தன்மையும் கேள்விக்குறியாகி உள்ளது. அதனால், இந்த புதிய நடைமுறையுடன், பழைய நடைமுறையையும் சேர்த்து டெண்டர் கோர தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என்.சேஷசாயி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வக்கீல் சி.பி.ஹேம்குமார் ஆஜராகி, இ-வங்கி உத்தரவாதம் எல்லா வங்கிகளிலும் இல்லை. அதனால், மனுதாரரை போல பல ஒப்பந்ததாரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்'' என்று வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதி, தேசிய நெடுஞ்சாலைத்துறை கூடுதல் செயலர், சூப்பிரண்டு என்ஜினீயர் ஆகியோர் இதுகுறித்து பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை புதன்கிழமைக்கு தள்ளி வைத்தனர்.


Next Story