அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிசாமி செயல்பட வேண்டும்


அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிசாமி செயல்பட வேண்டும்
x

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிசாமி செயல்பட வேண்டும் என்று மாவட்ட செயலாளர் குமார் கூறினார்.

திருச்சி

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்து வருகிறது. கட்சியின் முன்னணி நிர்வாகிகள் தங்கள் ஆதரவு யாருக்கு? என கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்தநிலையில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான ப.குமார் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:-

அ.தி.மு.க.வுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். இதையே சென்னையில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளோம். தற்போது அ.தி.மு.க.வில் இரண்டு கோஷ்டிகளாக செயல்பட்டு வருகிறார்கள். சட்டமன்றத்தில் ஒரு சிலர் தி.மு.க.வுடன் மென்மையான போக்கை கடைபிடிக்கிறார்கள். மற்றொரு பக்கம் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். ஒரு சிலர் தி.மு.க.வை சட்டமன்றத்துக்கு உள்ளேயே புகழ்வது, புத்தகம் பரிசளிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

அ.தி.மு.க.வுக்காக உழைக்கக்கூடியவர்கள் ஒரு பக்கமும், ஒட்டு திண்ணையில் எந்த வேலையும் செய்யாமல் அமர்ந்து இருப்பவர்கள் ஒரு பக்கமும் உள்ளனர். குறுக்கு வழியில் பதவியை பெற்று வருகிறார்கள். இதை பார்க்கும் தொண்டர்களின் மனநிலை எப்படி இருக்கும். பொதுமக்கள் மத்தியில் அ.தி.மு.க. நாளுக்கு நாள் நம்பிக்கை இழந்து வருகிறது. அடுத்து ஆட்சிக்கு வர வேண்டும் என்றால் அ.தி.மு.க.வுக்கு நம்பிக்கையான தலைவர் இருந்தால்தான் முடியும். எடப்பாடி பழனிசாமி 4½ ஆண்டுகளாக முதல்-அமைச்சர் பதவியில் துணிவோடும், தனித்தன்மையோடும் சிறப்பாக ஆட்சியை நடத்தினார். ஆகவே அ.தி.மு.க.வுக்கு எடப்பாடி பழனிசாமியே ஒற்றை தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும். இதுவே எங்களின் விருப்பம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story