அ.தி.மு.க.வில் இருந்து முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் நீக்கம் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு


அ.தி.மு.க.வில் இருந்து முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் நீக்கம் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
x

அ.தி.மு.க.வில் இருந்து முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் உள்பட 15 நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி நீக்கினார்.

சென்னை,

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் வரிசையாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன், விவசாய பிரிவு துணை செயலாளர் சி.ராஜேந்திரன், ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் கே.எஸ்.சீனிவாசன், இளைஞர்-இளம் பெண்கள் பாசறை இணை செயலாளர் ஆர்.ராஜலட்சுமி, சிறுபான்மையினர் நலப்பிரிவு இணை செயலாளர் எஸ்.எம்.கே.முகமது அலி ஜின்னா, விவசாய பிரிவு துணை செயலாளர் எம்.பாரதியார், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணை செயலாளர் பி.எஸ்.சிவா, அமைப்புசாரா ஓட்டுநர்கள் அணி துணை செயலாளர் ஆம்னி பஸ் அண்ணாதுரை, திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட துணை செயலாளர் எம்.ஆர்.ராஜ்மோகன், தகவல் தொழில்நுட்ப பிரிவு திருச்சி மண்டல துணை செயலாளர் சி.ராமச்சந்திரன், துணை தலைவர் மணவை ஜே.ஸ்ரீதரன் ராவ், தகவல் தொழில்நுட்ப பிரிவு சென்னை மண்டல இணை செயலாளர் டி.சுஜைனி, துணை செயலாளர்கள் ஆர்.விஜய் பாரத், வி.மோகனப் பிரியா, அண்ணா தொழிற்சங்க மின்சார பிரிவு பொருளாளர் ஜி.மோகன் ஆகிய 15 பேரை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம் செய்து கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவிப்பு வெளியிட்டார்.

மாறி மாறி நீக்கம்

இவர்கள் அனைவரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதாகவும், எனவே அ.தி.மு.க.வினர் யாரும் இவர்களுடன் எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என்றும் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களை எடப்பாடி பழனிசாமி நீக்கி வரும் வேளையில், அவரது ஆதரவாளர்களை ஓ.பன்னீர்செல்வம் நீக்கம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story