கரும்புக்கு ரூ.33 கொடுக்காவிட்டால் விவசாயிகளை திரட்டி ஆர்ப்பாட்டம் -எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு


கரும்புக்கு ரூ.33 கொடுக்காவிட்டால் விவசாயிகளை திரட்டி ஆர்ப்பாட்டம் -எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
x

கரும்புக்கு ரூ.33 கொடுக்கா விட்டால் விவசாயிகளை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சென்னை,

2023-ம் ஆண்டு தைப் பொங்கலுக்காக, ரேஷன் கார்டுதாரர்களுக்கு செங்கரும்பு வழங்கப்படும் என்ற எண்ணத்துடன் விவசாயிகள் அதிக அளவில் செங்கரும்பை சாகுபடி செய்துள்ளனர். இந்தநிலையில், பொங்கலுக்கு செங்கரும்பு வழங்கப்பட மாட்டாது என்று தி.மு.க. அரசு அறிவித்ததையொட்டி, வருகிற தைப் பொங்கலுக்கு, அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் வழங்கியதைப்போல், ரேஷன் கார்டுதாரர்கள் அனைவருக்கும் முழு செங்கரும்பு வழங்க வேண்டும் என்றும், செங்கரும்பை விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்றும், இல்லையெனில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிக்கை வெளியிட்டிருந்தேன்.

அதேபோல், செங்கரும்பு பயிரிட்ட விவசாயிகள், தாங்கள் விளைவித்த செங்கரும்பை கொள்முதல் செய்ய வேண்டும் என்று தி.மு.க. அரசை வலியுறுத்தி தமிழகத்தில் பல மாவட்டங்களில் போராட்டங்களை நடத்தினர். தி.மு.க. அரசு எங்களது தொடர் கோரிக்கையை அடுத்து, ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கலுக்கு முழு செங்கரும்பு வழங்கப்படும் என்று அறிவித்தது. மேலும், ஒரு கரும்பு 33 ரூபாய் வீதம் 2.19 கோடி கரும்புகள் கொள்முதல் செய்வதற்காக ரூ.72 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

எச்சரிக்கை

ஒரு கரும்புக்கு அரசு ஒதுக்கீடு செய்த தொகை 33 ரூபாய். ஆனால், இப்போது மாநிலம் முழுவதும் அதிகாரிகளும், இடைத்தரகர்களும் இணைந்து ஒரு கரும்புக்கு 15 முதல் 18 ரூபாய் வரை மட்டுமே விவசாயிகளுக்கு வழங்குவதாகவும், கரும்பு கொள்முதலில் பெரிய முறைகேடுகள் நடைபெறுவதாகவும் செய்திகள் வருகின்றன. செங்கரும்பு கொள்முதலில் நடைபெறும் முறைகேடுகளை தி.மு.க. அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், அரசு அறிவித்த ஒரு கரும்புக்கு விலையான 33 ரூபாய் முழுவதுமாக விவசாயிகளுக்கு சென்றடைவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.

அரசு அறிவித்த கரும்புக்கான முழு தொகையும் விவசாயிகளை சென்றடையா விட்டால், பொறுப்புள்ள எதிர்க்கட்சியான நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம். அ.தி.மு.க.வின் சார்பில் செங்கரும்பு பயிரிட்ட விவசாயிகளை ஒன்று திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. அரசை எச்சரிக்கை செய்கிறேன்.

கரும்பு கொள்முதலில் 'கமிஷன்' அடிக்கும் நோக்கத்தோடு அதிகாரிகள் செயல்படுவது, இடைத்தரகர்களை பயன்படுத்துவது போன்ற தி.மு.க. அரசின் விவசாய விரோத செயல்களுக்கு அ.தி.மு.க. சார்பில் எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story