டாஸ்மாக் பார் - 'நம்ம ஊரு சூப்பரு' விளம்பர பேனரில் மெகா ஊழல்-கவர்னரை சந்தித்த பின் எடப்பாடி பழனிசாமி பேட்டி


டாஸ்மாக் பார் - நம்ம ஊரு சூப்பரு விளம்பர பேனரில் மெகா ஊழல்-கவர்னரை சந்தித்த பின் எடப்பாடி பழனிசாமி பேட்டி
x

டாஸ்மாக் பார் மற்றும் 'நம்ம ஊரு சூப்பரு' விளம்பர பேனரில் மெகா ஊழல் என கவர்னரை சந்தித்த பின் எடப்பாடி பழனிசாமி கூறினார்

சென்னை

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் தமிழக கவர்னர் ஆர்.என் ரவியுடன் எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி சந்தித்துள்ளார்.

அப்போது தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை, மழை வெள்ள பாதிப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கவர்னருடனான சந்திப்பில் முன்னாள் அமைச்சர்கள் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், சி.வி.சண்முகம், ஜெயக்குமார், விஸ்வநாதன் ஆகியோரும் உடன் இருந்தனர்.

கவர்னருடனான சந்திப்புக்கு பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

தமிழகத்தில் உளவுத்துறை செயலிழந்து இருக்கிறது.கோவை சம்பவத்தை தமிழக உளவுத்துறை சரியாக கையாளவில்லை.

கோவையில் மக்கள் அதிகம் கூடும் இடத்தில் குண்டுவெடிப்பு நடந்திருந்தால் பாதிப்பு அதிகமாயிருக்கும். பல பேர் உயிரிழக்க நேரிட்டிருக்கும்.

தீவிரவாதம் என்றாலே உளவுத்துறைக்கு முன்கூட்டியே தெரிந்திருக்கும். உளவுத்துறை முன்கூட்டியே தெரிந்து இந்த குண்டுவெடிப்பைத் தடுத்திருக்கலாம். திமுக அரசு ஒரு திறமையற்ற அரசு.

கள்ளக்குறிச்சி கனியாமூர் சம்பவத்தில் முன்கூட்டியே விசாரணை நடைபெற்றிருந்தால் வன்முறை, கலவரம் ஏற்பட்டிருக்காது.

மாணவர்களிடையே போதைப்பொருள் பழக்கம் அதிகரித்துள்ளது. அண்டை மாநிலங்களில் இருந்து போதைப் பொருள் கடத்தல் சாதாரணமாக இங்கு நடக்கிறது.

அனைத்துத் துறைகளில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. திமுக அரசு என்றாலே கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன் தான்.

திமுக ஆட்சியில் தற்போது மருந்து தட்டுப்பாடு என்பதை அமைச்சரே ஒத்துக்கொண்டுள்ளார். மருந்து கொள்முதலில் ஊழல் நடந்து வருகிறது. காலாவதி மருந்தும் பயன்பாட்டில் உள்ளது.

இன்று உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரத்தை திமுக அரசு பறித்துவிட்டது.

'நம்ம ஊரு சூப்பரு' விளம்பர பேனரில் மெகா ஊழல் நடந்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரே ஒப்பந்ததாரருக்கு வழங்கப்பட்டுள்ளது. ரூ. 350 மதிப்புள்ள ஒரு பேனருக்கு ரூ. 7,906 செலவு செய்வதாக கணக்கு காட்டியுள்ளனர். பணி செய்வதற்கு முன்னரே, திமுக அரசு நிதி வழங்கி விடுகிறது. இதுவே திமுக ஊழலுக்கு உதாரணம்

டெண்டர் இல்லாமல் பார் நடத்துதல், 24 மணி நேரமும் மது விற்பனை என டாஸ்மாக்கிலும் மெகா முறைகேடு நடந்து வருகிறது.

தமிழக கவர்னர் இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளார்' என்றார்.


Next Story