தமிழகத்தில் நீட் தேர்வு காரணமாக 21 பேர் பலியானதற்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம் -அமைச்சர் குற்றச்சாட்டு


தமிழகத்தில் நீட் தேர்வு காரணமாக 21 பேர் பலியானதற்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம் -அமைச்சர் குற்றச்சாட்டு
x

தமிழகத்தில் நீட் தேர்வு காரணமாக 21 பேர் பலியானதற்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

வேலூர்,

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் புறநோயாளிகள் பிரிவில் 'வைட்டல் பே' எனும் திட்டத்தையும், வேலூரை அடுத்த பொய்கை ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.60 லட்சத்தில் கட்டப்பட்ட புறநோயாளிகள் பிரிவு கட்டிடத்தையும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் உள்ள 36 அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிகளிலும் வைட்டல் பே தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், நோயாளிகள் காலவிரையம் இன்றி டாக்டர்களை விரைவாக சந்திக்க முடியும்.

மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க. மாநாட்டில் எடப்பாடி கே.பழனிசாமி தமிழக சுகாதாரத்துறை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார். இந்த துறையானது கடந்த அ.தி.மு.க. ஆட்சியைவிட தி.மு.க. ஆட்சியில்தான் பெரும் சாதனைகளை புரிந்து வருகிறது.

நான்கில் ஒரு பங்கு

73 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தி.மு.க. ஆட்சியில்தான் புதிதாக ஒரு பல் மருத்துவக் கல்லூரி தொடங்க மத்திய அரசிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. மருத்துவக் கட்டமைப்பு, மருத்துவ சேவைகளுக்காக மத்திய அரசு சார்பில் 2013 முதல் வழங்கப்பட்டு வரும் தேசிய தர மதிப்பீட்டுச் சான்றிதழ் இதுவரை தமிழகத்துக்கு 478 சான்றுகள் பெறப்பட்டுள்ளன. இதில், கடந்த ஓராண்டில் மட்டும் 239 சான்றுகள் பெறப்பட்டுள்ளன.

அ.தி.மு.க. ஆட்சியில் 9 ஆண்டுகளில் பெற்ற சான்றுகளின் எண்ணிக்கையை தி.மு.க. ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டில் அதிக விருதுகளை பெற்றுள்ளது. இதேபோல் பல்வேறு பிரிவுகளில் ஏராளமான தரச்சான்றுகள் பெற்றுள்ளோம். அந்தவகையில், தி.மு.க. ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் செயல்படுத்திய திட்டங்களில் நான்கில் ஒரு பங்குகூட முன்பு 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அ.தி.மு.க. செயல்படுத்தவில்லை. இதுகுறித்து எடப்பாடி பழனிசாமியுடன் நேருக்குநேர் விவாதிக்கவும் தயாராக உள்ளோம்.

நீட் தேர்வு

ஜெயலலிதா ஆட்சியில் இருந்தவரை தமிழகத்துக்கு நீட் தேர்வில் விலக்கு இருந்தது. எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வந்தபிறகுதான் நீட் தேர்வு தமிழகத்துக்குள் வந்தது. அந்த வகையில், தமிழகத்துக்குள் நீட் தேர்வு வருவதற்கும், இதுவரை 21 பேர் பலியானதற்கும் எடப்பாடி பழனிசாமிதான் காரணமாவார். இதனை மக்கள் நன்கு அறிவார்கள்.

தமிழகத்தில் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, மும்பைக்கு அடுத்தபடியாக இந்தியாவில் மிகப்பெரிய அளவிலான புற்றுநோய் ஆராய்ச்சி மையம் காஞ்சீபுரத்தில் ரூ.300 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story