படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் ஷ்ரவன் குமார் தகவல்


படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்  கலெக்டர் ஷ்ரவன் குமார் தகவல்
x
தினத்தந்தி 13 Oct 2022 6:45 PM GMT (Updated: 13 Oct 2022 6:46 PM GMT)

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட தொழில்நெறி மற்றும் வழிகாட்டுதல் அலுவலகம் சார்பில் 01.10.2022 தொடங்கும் காலாண்டிற்கு படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் பயன்பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்றகப்படுகின்றன.

10-ம் வகுப்பு தேர்ச்சி, தோல்வி மற்றும் அதற்கு மேலான கல்வித்தகுதிகளை பெற்றவர்கள் வேலைவாய்ப்பு அலுவகத்தில் பதிவு செய்து பதிவை தொடர்ந்து புதுப்பித்து 31.12.2022 அன்றைய தேதியில் 5 ஆண்டுகள் நிறைவடைந்த பின்னர் வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் பயன்பெற மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மேலும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரர்கள் 31.12.2022 அன்றைய தேதியில் 45 வயதிற்குள்ளும், இதர இனத்தை சார்ந்தவர்கள் 40 வயதிற்குள்ளும் இருத்தல் வேண்டும்.

அடுத்த மாதம் 30-ந்தேதி வரை

உதவித்தொகை விண்ணப்பப்படிவம் பெற விரும்பும் மனுதாரர்கள் தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டையை ஆதாரமாக காண்பித்து கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் விண்ணப்பங்களை அனைத்து அலுவலக வேலை நாட்களில் இலவசமாகவோ அல்லது https://employmentexchange.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அடுத்த மாதம்(நவம்பர்) 30-ந்தேதி வரை விண்ணப்பித்து பயனடையலாம். மேலும் இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே பயன்பெற்றவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க அவசியமில்லை. இத்திட்டத்தின்கீழ் பயன்பெறுபவர்களின் பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.

அடையாள அட்டை

மேலும் உதவித்தொகை விண்ணப்பங்களை மனுதாரர்கள் அடுத்த மாதம் 30-ந்தேதி வரை அனைத்து அலுவலக வேலை நாட்களிலும் கள்ளக்குறிச்சி நேப்பால் தெருவில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அனைத்து அசல் கல்வி சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கணக்கு புத்தகத்துடன் நேரில் சமர்ப்பித்து பயனடைய வேண்டும். மேற்கண்ட தகவல் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டா் ஷ்ரவன் குமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story