கல்வி அதிகாரம் முழுவதையும் மாநில அரசுக்கே வழங்க வேண்டும் அமைச்சர் பொன்முடி பேச்சு


கல்வி அதிகாரம் முழுவதையும் மாநில அரசுக்கே வழங்க வேண்டும்  அமைச்சர் பொன்முடி பேச்சு
x

கல்வி அதிகாரம் முழுவதையும் மாநில அரசுக்கே வழங்க வேண்டும் என்று விழுப்புரத்தில் நடந்த கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி பேசினார்.

விழுப்புரம்



விழுப்புரம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நேற்று கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மு.க.ஸ்டாலின் நற்பணி மன்ற தலைவர் டாக்டர் பொன்.கவுதமசிகாமணி எம்.பி. தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தினகரன் அனைவரையும் வரவேற்றார்.

துணை அமைப்பாளர்கள் இளந்திரையன், அன்பு, ராஜவேல், பாலாஜி, கலைவாணன், நகரமன்ற துணைத்தலைவர் சித்திக்அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மாவட்ட செயலாளர் புகழேந்தி எம்.எல்.ஏ., திராவிடர் கழக பிரசாரக்குழு செயலாளர் அருள்மொழி, தி.மு.க. செய்திதொடர்பு இணைச்செயலாளர் ராஜிவ்காந்தி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

கல்வி அதிகாரம்

கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி பேசுகையில், இந்தியை கட்டாயப்படுத்துவதை ஆரம்பத்தில் இருந்தே நாம் எதிர்த்தோம். மாநிலத்திற்கு முழுமையாக கல்வி அதிகாரத்தை கொடுக்க வேண்டுமென வலியுறுத்தி வருகிறோம். புதிய கல்விக்கொள்கை குறித்து முதல்-அமைச்சர் ஒரு குழுவை அமைத்துள்ளார். இந்த குழுவில் உங்கள் கருத்துகளை தெரிவிக்க வேண்டும். மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையில் பலவற்றை நாம் எதிர்க்கிறோம். குறிப்பாக, 3, 5, 8-ம் வகுப்புக்கெல்லாம் பொதுத்தேர்வு உள்ளது. அவ்வாறு பொதுத்தேர்வு வைத்தால் இடைநிற்றல் அதிகமாகும். எனவேதான் வேண்டாம் என்கிறோம். தற்போது, பட்டப்படிப்புக்கும் நுழைவுத்தேர்வு என்பதை நாம் முழுமையாக எதிர்க்கிறோம் என்றார்.

இக்கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் புஷ்பராஜ், மாநில விவசாய அணி துணை செயலாளர் அன்னியூர்சிவா, நகர செயலாளர் சக்கரை, நகரமன்ற தலைவர் தமிழ்செல்வி, பொதுக்குழு உறுப்பினர் பஞ்சநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் நகர இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.


Next Story