விவசாய நிலங்களில் மின்வேலி அமைத்தால் கடும் நடவடிக்கைவிழுப்புரம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் எச்சரிக்கை


விவசாய நிலங்களில் மின்வேலி அமைத்தால் கடும் நடவடிக்கைவிழுப்புரம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 4 April 2023 6:45 PM GMT (Updated: 4 April 2023 6:46 PM GMT)

விவசாய நிலங்களில் மின்வேலி அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விழுப்புரம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் ராஜேந்திர விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விழுப்புரம்



இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மின்வேலி அமைத்தால் நடவடிக்கை

விழுப்புரம் மாவட்டத்தில் மழை, காற்று காலங்களில் மின் விபத்துகளை தவிர்க்கும் பொருட்டும், பொதுமக்களிடம் விழிப்புணர்வுடன் செயல்பட்டு மின் விபத்துகளையும் அதன் மூலம் ஏற்படும் உயிர் சேதங்களையும் தவிர்க்குமாறு மின்வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.

விவசாயிகள், தங்கள் நிலத்தில் பயிர்களை காப்பாற்ற மின்வேலி அமைப்பதன் மூலம் அதை அறியாத அப்பாவி பொதுமக்கள், விலங்குகள் மின் விபத்துக்கு உள்ளாகும் நிலை உள்ளது. எனவே விவசாய நிலத்தில் மின்வேலி அமைக்க வேண்டாம். விவசாய நிலத்தில் மின்வேலி அமைப்பது கிரிமினல் குற்றம், மீறும்பட்சத்தில் இந்திய தண்டனை சட்டம் மின்சார பிரிவின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மின்கம்பி அறுந்து கிடந்தால் பொதுமக்கள், யாரும் அதனை தொடாமலும் அருகில் செல்லாமலும் உடனடியாக அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மின்கம்பங்கள் பழுதடைந்த நிலையில் இருந்தாலோ மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் மின்கம்பிகள் தொய்வாக இருப்பதை கண்டறிந்தாலோ பொதுமக்கள் அதனை தொடாமல் உடனடியாக அருகில் உள்ள மின்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

கரும்பு டிராக்டர்கள்

டிராக்டர், லாரியில் கரும்பு போன்றவற்றை அளவுக்கு அதிகமாக ஏற்றிச் செல்லும்போது அருகில் உள்ள மின்பாதை மின்கம்பிகளை உரசாமல் மிகவும் கவனமாக செல்ல வேண்டும்.

பொதுமக்கள், மின்பாதைக்கு அருகில் வீடு, கட்டிடம் கட்டும்போது மின்பாதையில் இருந்து போதிய இடைவெளிவிட்டு கட்ட வேண்டும். மின்பாதையின் அருகில் செல்லாமலும், மின்பாதையை தொடாமலும் கவனமாக கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

பொதுமக்களின் தகவலுக்கு

மேலும் பழுதடைந்த மின்கம்பம், அறுந்து கிடக்கும் மின்கம்பிகள் பற்றிய தகவலை 9498794987 என்ற மின்னகம் எண்ணை தொடர்புகொண்டும், 9445855768 என்ற வாட்ஸ்-அப் எண் மூலமாகவும் தெரிவிக்கலாம். இதுதவிர தங்கள் பகுதியை சேர்ந்த செயற்பொறியாளர்களான விழுப்புரம் செயற்பொறியாளர்- 94458 55738, கண்டமங்கலம் செயற்பொறியாளர்- 94458 55769, திண்டிவனம் செயற்பொறியாளர்- 94458 55835, செஞ்சி செயற்பொறியாளர்- 94458 55784 ஆகிய செல்போன் எண்களை தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story