நாகை தற்காலிக பஸ் நிலையத்தில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டன


‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக நாகை தற்காலிக பஸ் நிலையத்தில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

நாகப்பட்டினம்

நாகப்பட்டினம்:

'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக நாகை தற்காலிக பஸ் நிலையத்தில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

தற்காலிக பஸ் நிலையம்

நாகை புதிய பஸ் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இதனை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக தற்காலிக பஸ் நிலையம் நாகை அவுரி திடலில் அமைக்கப்பட்டுள்ளது.இந்த தற்காலிக பஸ் நிலையத்தில் தினமும் நூற்றுக்கணக்கான அரசு மற்றும் தனியார் பஸ்கள் வந்து செல்கின்றன. தற்காலிக பஸ் நிலையத்தில் போதிய இடவசதி இல்லாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

பயணிகள் அவதி

நாகை தற்காலிக பஸ் நிலையத்தில் போதிய மின் விளக்குகள் இல்லாததால் இருள் சூழ்ந்து காணப்பட்டது.

இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் கடும் அவதியடைந்தனர். பெண்களிடம் மர்ம நபர்கள் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடும் நிலை இருந்து வந்தது.

இந்த தற்காலிக பஸ் நிலையத்தில் மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்த செய்தி கடந்த 27- ந்தேதி 'தினத்தந்தி' நாளிதழில் படத்துடன் வெளியானது.

மின்விளக்கு பொருத்தப்பட்டது

இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தற்காலிக பஸ் நிலையத்தில் மின்விளக்குகள் பொருத்தினர்.

இதை தொடர்ந்து தற்காலிக பஸ் நிலையத்தில் மின்விளக்கு அமைத்து கொடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழிலுக்கும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். மேலும் புதிய பஸ் நிலைய மேம்படுத்தும் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story