சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் திருட்டுத்தனமாக மின்சாரத்தை பயன்படுத்திய 7 வீடுகளுக்கு மின் இணைப்பு துண்டிப்பு


சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் திருட்டுத்தனமாக மின்சாரத்தை பயன்படுத்திய 7 வீடுகளுக்கு மின் இணைப்பு துண்டிப்பு
x

சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் திருட்டுத்தனமாக மின்சாரத்தை பயன்படுத்திய 7 வீடுகளின் மின் இணைப்பு போலீஸ் பாதுகாப்புடன் துண்டிக்கப்பட்டது.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட சிங்கப்பெருமாள் கோவில் ஜெ.ஜெ. நகர் பகுதியில் மின்சார வாரிய அலுவலகத்தின் அனுமதி இல்லாமல் வீடுகளில் மின் மீட்டர் பொருத்தி திருட்டுத்தனமாக மின்சாரம் பயன்படுத்தி வருவதாக தொடர்ந்து மின்வாரியத்திற்கு புகார்கள் வந்து கொண்டிருந்தது. இதனை தொடர்ந்து நேற்று மின்சார வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று அங்கு உள்ள வீடுகளில் களஆய்வு செய்த போது 7 வீடுகளில் அனுமதி இல்லாமல் மின்மீட்டர் பொருத்தி திருட்டுத்தனமாக மின்சாரம் பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து மின்சார வாரிய அதிகாரி உத்தரவுப்படி ஊழியர்கள் திருட்டுத்தனமாக பயன்படுத்தி வந்த அந்த 7 வீடுகளில் மின் இணைப்பை போலீஸ் பாதுகாப்புடன் துண்டித்தனர். மேலும் அந்த வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த மீட்டர்களையும் மின்வாரிய ஊழியர்கள் கைப்பற்றினர்.

இதுகுறித்து மின்சார வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

மின்சார வாரிய அலுவலகத்தில் அனுமதி இல்லாமல் இனிவரும் காலங்களில் யாராவது மின் மீட்டர்களை பொருத்தி திருட்டுத்தனமாக மின்சாரத்தை வீடுகளில் பயன்படுத்தி வந்தால் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story