தூத்துக்குடியில் அனைத்து பகுதிகளிலும் மின் விநியோகம் சீரானது- மின்வாரியம் அறிவிப்பு


தூத்துக்குடியில் அனைத்து பகுதிகளிலும் மின் விநியோகம் சீரானது- மின்வாரியம் அறிவிப்பு
x

கோப்புப்படம் 

தூத்துக்குடியில் பெய்த வரலாறு காணாத கனமழையால் மின் விநியோகம், தொலைதொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டது.

தூத்துக்குடி,

தென் மாவட்டங்களில் கடந்த 16, 17-ம் தேதிகளில் பெய்த வரலாறு காணாத வகையில் மிக குறைந்த நேரத்தில் அதீத கனமழை பெய்ததால், தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குளங்கள், ஆறுகளில் உடைப்பு ஏற்பட்டது.

இதன் காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளத்தால் தத்தளித்தன. தூத்துக்குடி நகரம் மட்டுமின்றி திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஏரல், தென்திருப்பேரை, ஆறுமுகனேரி, காயல்பட்டினம், ஆழ்வார்திருநகரி, நாசரேத் சுற்றுவட்டார பகுதிகள் உள்பட மாவட்டம் முழுக்க ஆயிரத்திற்கும் அதிக கிராமங்களை வெள்ளம் சூழந்தது.

ஏராளமான இடங்களில் பாலங்கள் உடைந்தும், சாலைகள் துண்டிக்கப்பட்டும் போக்குவரத்து தடைப்பட்டது. மேலும் மின் விநியோகம், தொலைத்தொடர்பு சேவைகளும் பாதிக்கப்பட்டது. மழை நின்று ஒரு வாரத்திற்கும் மேலாகி விட்ட நிலையில், தூத்துக்குடியில் முழுமையாக மின்சேவை வழங்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில், தூத்துக்குடியில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் முழுமையாக மின் விநியோகம் வழங்கப்பட்டு விட்டதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.


Next Story