மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

மின்வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோத்தகிரி, பந்தலூரில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி

கோத்தகிரி,

மின்வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோத்தகிரி, பந்தலூரில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மின்வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்வாரிய ஊழியர் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் கோத்தகிரி மின்வாரிய அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு உதவி செயற்பொறியாளர் மாதன் தலைமை தாங்கினார். பொறியாளர் சங்க செயலாளர் கமல் குமார், தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்க துணை தலைவர் விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் மின்வாரிய சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டால், மின்வாரிய துறை தனியார் மயமாகும். இதனால் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாவார்கள். எனவே சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றக்்கூடாது என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து நிர்வாகிகள் கூறியதாவது:- சட்ட திருத்த மசோதா நிறைவேறினால் மின் மீட்டர் பொருத்தும் பணி, மின் கட்டணத்தை நிர்ணயம் செய்வது, கட்டணம் வசூலிப்பது போன்றவை தனியார் வசம் சென்று விடும்.

கடுமையாக பாதிக்கப்படுவார்கள்

இதனால் மின்கட்டண நகரம், பேரூராட்சி என இடத்துக்கு இடம் மாறுபடும். தற்போது வீடுகளுக்கு உற்பத்தி செலவை விட, குறைவான விலைக்கு அரசு மின்சாரத்தை வினியோகம் செய்கிறது. மசோதா நிறைவேறினால், நுகர்வோர் மின்சாரத்துக்கு அதிக விலை கொடுக்க வேண்டிய நிலை உருவாகும். இதனால் ஏழை மக்கள், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மின்வாரியத்தை மத்திய அரசு தனியார் மயமாக்குவதை கண்டித்து அனைத்து மின்வாரிய தொழிற்சங்கம் சார்பில், பந்தலூர் அருகே அய்யன்கொல்லி மின்வாரிய அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் மணிகண்டன், பத்மநாபன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story