தாளவாடி அருகே தோட்டத்தில் புகுந்து யானைகள் விடிய, விடிய அட்டகாசம்- 15 தென்னை மரங்கள், 1 ஏக்கர் கரும்புகள் சேதம்


தாளவாடி அருகே தோட்டத்தில் புகுந்து யானைகள் விடிய, விடிய அட்டகாசம்- 15 தென்னை மரங்கள், 1 ஏக்கர் கரும்புகள் சேதம்
x

தாளவாடி அருகே தோட்டத்தில் புகுந்த யானைகள் விடிய, விடிய அட்டகாசத்தில் ஈடுபட்டன. இதில் 15 தென்னை மரங்கள், 1 ஏக்கர் பரப்பளவிலான கரும்புகள் சேதமடைந்தன.

ஈரோடு

தாளவாடி

தாளவாடி அருகே தோட்டத்தில் புகுந்த யானைகள் விடிய, விடிய அட்டகாசத்தில் ஈடுபட்டன. இதில் 15 தென்னை மரங்கள், 1 ஏக்கர் பரப்பளவிலான கரும்புகள் சேதமடைந்தன.

வனவிலங்குகள்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களில் யானை, புலி, சிறுத்தை உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதில் குறிப்பாக யானைகள் அடிக்கடி உணவு, தண்ணீர் தேடி வனப்பகுதியையொட்டி வெளியேறி அருகே உள்ள விவசாய தோட்டங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்கின்றன. இது தொடர் கதையாகி வருகிறது. இதனால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

தாளவாடி அருகே உள்ள ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உள்பட்ட அருள்வாடி கிராமத்தை சேர்ந்தவர் துரைசாமி (வயது 45). விவசாயி. இவரது வீட்டையொட்டி தோட்டம் உள்ளது. அதில் அவர் கரும்பு சாகுபடி செய்துள்ளார். மேலும் தென்னை மரங்களையும் நட்டு வளர்த்து வருகிறார்.

யானைகள் அட்டகாசம்

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜீர்கள்ளி வனப்பகுதியில் இருந்து 5 யானைகள் வெளியேறி துரைசாமியின் கரும்பு தோட்டத்துக்குள் புகுந்தன. அதன்பின்னர் அங்கு சாகுபடி செய்யப்பட்டிருந்த கரும்புகளை துதிக்கையால் முறித்து தின்றன.

யானைகளின் பிளிறல் சத்தம் கேட்டு வீட்டில் தூங்கி கொண்டிருந்த துரைசாமி திடுக்கிட்டு எழுந்தார். பின்னர் வெளியே வந்து பார்த்தார். அங்கு 5 யானைகள் நின்று கொண்டு கரும்புகளை சேதப்படுத்தி கொண்டிருந்தன. மேலும் தென்னங்குருத்துக்களை பிடுங்கி தின்று மரங்களையும் துதிக்கையால் பிடுங்கி வீசி கொண்டிருந்தன.

காட்டுக்குள் சென்றன

அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம்பக்கத்து விவசாயிகளுக்கு தகவல் கொடுத்தார். அதைத்தொடர்ந்து அனைவரும் அங்கு ஒன்று திரண்டனர். பின்னர் விவசாயிகள் சேர்ந்து சத்தம் போட்டு யானைகளை காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் யானைகள் அங்கிருந்து வனப்பகுதிக்குள் செல்லவில்லை. தோட்டத்துக்குள் அங்கும் இங்கும் சுற்றி திரிந்தபடி கரும்பு, தென்னை மரங்களை சேதப்படுத்தின.

விடிய விடிய இந்த அட்டகாசம் தொடர்ந்தது. இந்த நிலையில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் யானைகள் அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றன. யானைகளால் சுமார் 1 ஏக்கர் பரப்பளவிலான கரும்புகள், 15 தென்னை மரங்கள் சேதப்படுத்தப்பட்டன. இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயி கூறும்போது, 'சேதமடைந்த பயிர்களுக்கு வனத்துறையினர் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் வனப்பகுதியை சுற்றி ஆழமாகவும், அகலமாகவும் அகழி அமைக்க வேண்டும்' என்றனர்.

1 More update

Next Story