பயிர்களை சேதப்படுத்திய யானைகள்


தினத்தந்தி 12 Dec 2022 6:45 PM GMT (Updated: 12 Dec 2022 6:47 PM GMT)

தளி அருகே விவசாய நிலங்களில் புகுந்து யானைகள் கூட்டம் பயிர்களை சேதப்படுத்தின.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை

தளி அருகே விவசாய நிலங்களில் புகுந்து யானைகள் கூட்டம் பயிர்களை சேதப்படுத்தின.

யானைகள்

கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட யானைகள் தமிழக வனப்பகுதிகளான ஜவளகிரி, நொகனூர் உள்ளிட்ட வனப்பகுதிகளுக்கு வந்தன. இந்த யானைகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

இதனிடையே தளி அருகே உள்ள அகலகோட்டை ஊராட்சி தோவீதி, கல்லுபாலம், கும்மளத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் நேற்று அதிகாலை 35 யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து ராகி, சோளம், துவரை உள்ளிட்ட பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்தின. மேலும் மாரப்பா என்பவரது நர்சரி பண்ணையில் புகுந்து விற்பனைக்கு தயாராக வைத்திருந்த ரோஜா செடிகளை யானைகள் சேதப்படுத்தி சென்றன.

வனப்பகுதிக்குள் விரட்டினர்

இதுகுறித்து பொதுமக்கள் ஜவளகிரி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் விரைந்து வந்து சுற்றித்திரிந்த யானைகளை பட்டாசுகள் வெடித்து கல்லுபாலம் வனப்பகுதிக்குள் விரட்டினர். யானைகளால் சேதமடைந்த பயிர்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும். இந்த யானைகளை கர்நாடக வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

தளி அருகே யானைகள் சுற்றித்திரிவதால் கிராமமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.


Next Story