தகுதி வாய்ந்த பயனாளிகள் மேல்முறையீடு செய்யலாம்


தகுதி வாய்ந்த பயனாளிகள் மேல்முறையீடு செய்யலாம்
x

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெறாத தகுதி வாய்ந்த பயனாளிகள் உரிய ஆதார ஆவணங்களுடன் மேல்முறையீடு செய்யலாம் என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

வேலூர்

உதவி மையங்கள் தொடக்கம்

தமிழகம் முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் கடந்த 15-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டம் தொடர்பாக பொதுமக்களின் சந்தேகம் மற்றும் தகவல்கள் அளிக்கும் வகையில் வேலூர் கலெக்டர் அலுவலகம், 2 உதவி கலெக்டர் அலுவலகங்கள், 6 தாலுகா அலுவலகங்களில் உதவிமையங்கள் அமைக்கப்பட்டு, நேற்று முதல் செயல்பட தொடங்கியது. இந்த மையங்களில் மகளிர் உரிமைத்தொகை வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படாத பெண்கள் சென்று தங்கள் சந்தேகங்களை தெரிவித்து, விண்ணப்பத்தின் நிலை குறித்து கேட்டறிந்தனர்.

வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த உதவி மையத்தை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், அங்கு வந்த பெண்கள் மகளிர் உரிமைத்தொகை தொடர்பாக தெரிவித்த சந்தேகங்களை கேட்டறிந்து பதில் அளித்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

மேல்முறையீடு செய்யலாம்

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் விடுபட்ட அல்லது தகவல்கள் பெறாத பயனாளிகளுக்கு அவர்களின் விண்ணப்பத்தின் நிலை குறித்து தெரிவிக்கவும், அவர்கள் இ-சேவை மையங்கள் வாயிலாக மேல்முறையீடு செய்வது குறித்து அறிவுறுத்தவும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின்கீழ் விண்ணப்பப்படிவம் அளிக்கப்பட்டு, செல்போனுக்கு குறுஞ்செய்தி வரப்பெற்றும் அல்லது வரப்பெறாத பொதுமக்கள் உதவி மையத்தினை அணுகி ஆதார் எண் அல்லது குடும்ப அட்டை எண்ணை தெரிவித்து தங்களது விண்ணப்பத்தின் நிலையை தெரிந்து கொள்ளலாம்.

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் எந்த விதிமுறைகளை பூர்த்தி செய்யவில்லை என்பதை பொதுமக்கள் http://kmut.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது ஆதார் எண் மூலமாக தெரிந்து கொள்ளலாம். இந்த திட்டத்தின்கீழ் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருப்பதாக குறுஞ்செய்தி வரப்பெற்று 30 நாட்களுக்குள் தாங்கள் தகுதிவாய்ந்த பயனாளி என்பதற்கான உரிய ஆதார ஆவணங்களுடன் வருவாய் கோட்ட அலுவலருக்கு இ-சேவை மையத்தினை அணுகி மேல்முறையீடு செய்யலாம். மேல்முறையீடு செய்வதற்கு எவ்வித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.

விண்ணப்பம் பரிசீலனை

அரசிடம் இருந்து குறுஞ்செய்தி எதுவும் வரவில்லை என்றால் பொதுமக்கள் செல்போன் சரியாக இயங்குகிறதா? என்று சரிபார்க்க வேண்டும். விண்ணப்பம் பரிசீலனையில் இருந்தால் குறுஞ்செய்தி உடனடியாக வராது. மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்காதவர்கள் அரசு அறிவிக்கும் தேதியில் இருந்து இ-சேவை மையங்கள் வழியாக விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

ஆய்வின்போது வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துனை கலெக்டர் தனஞ்செழியன், கலெக்டர் அலுவலக பொதுமேலாளர் பாலாஜி உள்பட பலர் உடனிருந்தனர்.

1 More update

Next Story