மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்க முக்கியத்துவம் அளிக்கப்படும்


மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்க முக்கியத்துவம் அளிக்கப்படும்
x
தினத்தந்தி 13 Oct 2023 6:45 PM GMT (Updated: 13 Oct 2023 6:47 PM GMT)

தென்னை, அதை சார்ந்த தொழில்களில் மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்க முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று மத்திய வேளாண்மை துறை செயலாளர் மனோஜ் அகுஜா தெரிவித்தார்.

கோயம்புத்தூர்
பொள்ளாச்சி


தென்னை, அதை சார்ந்த தொழில்களில் மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்க முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று மத்திய வேளாண்மை துறை செயலாளர் மனோஜ் அகுஜா தெரிவித்தார்.


மத்திய, மாநில குழு ஆய்வு


தேங்காய், கொப்பரை தேங்காய் மற்றும் தென்னை நார் தொழிற் சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. இந்த தொழில் களில் உள்ள பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்ய மத்திய, மாநில அரசு அதிகாரிகள் கொண்ட உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது.


மத்திய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை செயலாளர் மனோஜ் அகுஜா, நிதித்துறை கூடுதல் செயலாளர் சஜ்ஜன் சிங் யாதவ், இணை செயலாளர் பிரியா ராஜன், தமிழக வேளாண்மை உற்பத்தியாளர் குழு செயலாளர் சமயமூர்த்தி, காயர் போர்டு தலைவர் குப்புராம், சப்-கலெக்டர் பிரியங்கா மற்றும் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் கொண்ட உயர்மட்ட குழுவினர் தேங்காயில் இருந்து மதிப்பு கூட்டுப்பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை, நீரா பானம் தயாரிப்பு, தென்னைநார் தொழிற்சாலைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.


கலந்துரையாடல் கூட்டம்


அப்போது தொழிலில் உள்ள பிரச்சினைகள் குறித்தும், அதற்கு உரிய தீர்வுகள் குறித்தும் விவசாயிகளிடம் உயர்மட்ட குழுவினர் கேட்டறிந்தனர். பின்னர் பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் விவசாயிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.


இதில் தென்னை, அதை சார்ந்த தொழில்களை பாதுகாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவசாயிகள் பேசினார்கள். பின்னர் மத்திய வேளாண்மை துறை செயலாளர் மனோஜ் அகுஜா பேசியதாவது:-


விஞ்ஞானிகள் குழு


தென்னை மற்றும் அதை சார்ந்த தொழில்களில் உள்ள குறைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஒரு துறை மட்டுமல்ல அனைத்து துறை அதிகாரிகள் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டு உள்ளனர். இங்கு வந்து ஆய்வு செய்தது நல்ல அனுபவமாக உள்ளது.


தென்னையில் இருந்து பல்வேறு பயனுள்ள பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. தென்னைக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. மத்திய, மாநில அரசுகளின் குழு ஆய்வு செய்து வருங் காலத்தில் அரசின் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.


தொழில் தொடங்கும் சூழல்


தென்னையில் நோய் தாக்குதலை தடுக்க விஞ்ஞானிகள் கொண்ட குழு அமைத்து ஆய்வு செய்யப்படும். தென்னையில் மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்க முக்கியத்துவம் அளிக்கப் படும். தொழில் தொடங்க நல்ல சூழ்நிலை ஏற்படுத்தி கொடுக் கப்படும். விவசாயிகள் தரமான பொருட்களை விற்பனை செய்ய வேண்டும்.

தோட்டக்கலைத்துறை, காயர் போர்டு இணைந்து தயாரிக்கும் பொருட்களை டெல்லியில் விற்பனை செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.கூட்டத்தில் மத்திய, மாநில அரசு அதிகாரிகள், விவசாயிகள், தென்னை நார் உற்பத்தியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story