தனியார் வேலை வாய்ப்பு முகாமில் 38 பேருக்கு பணி நியமன ஆணை


தனியார் வேலை வாய்ப்பு முகாமில் 38 பேருக்கு பணி நியமன ஆணை
x

தனியார் வேலை வாய்ப்பு முகாமில் 38 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நேற்று நடந்தது. முகாமிற்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர் தமிழ்பாக்யா முன்னிலை வகித்தார். முகாமில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 9 முன்னணி தனியார் துறை நிறுவனத்தினர் கலந்து கொண்டு தங்களது காலிப்பணியிடங்களை கல்வித்தகுதிகளின் அடிப்படையில் தேர்வு செய்தனர்.

இதில் படித்த வேலை வாய்ப்பற்ற ஆண்கள், பெண்கள் என மொத்தம் 125 பேர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். முகாமில் தேர்வு செய்யப்பட்ட 38 பேருக்கு பணி நியமன ஆணைகளை வேலை வாய்ப்பு அலுவலர் ராதாகிருஷ்ணன் வழங்கினார். மேலும் அவர் கூறுகையில், இந்த முகாம் மாதந்தோறும் 3-வது வெள்ளிக்கிழமை நடைபெறும். பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த சிறு, குறு மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நபர்களை அவர்களது நிர்வாகிகளை கொண்டோ அல்லது நேரில் வந்தோ தேர்வு செய்து கொள்ளலாம். முகாமில் கலந்து கொள்ளும் தனியார் துறை நிறுவனங்கள் தங்களது நிறுவன விவரங்களையும், வேலை நாடுனர்கள் தங்களது கல்வித்தகுதி மற்றும் சுயவிவரங்களையும் https://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்ய வேண்டும். தனியார் துறைகளில் வேலை வாய்ப்பு பெறுபவர்களுக்கு, அவர்களது வேலை வாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படாது, என்றார்.

1 More update

Next Story