வாழப்பாடியில் பாதை அமைக்க ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம் வீட்டு உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு


வாழப்பாடியில்  பாதை அமைக்க ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்  வீட்டு உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
x

வாழப்பாடியில் பாதை அமைக்க ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டன. அப்போது வீட்டு உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்

வாழப்பாடி,

வாழப்பாடி பேரூராட்சி காளியம்மன் நகர் அருகே சேலம் விருதாச்சலம் ெரயில்பாதையில் குறுக்கிடும் ஆளில்லாத ெரயில்வே கேட்டிற்கு மாற்றாக 3 ஆண்டுகளுக்கு முன்பு ெரயில்வே சுரங்கப்பாலம் அமைக்கப்பட்டது. ஆனால், சுரங்கப்பாலத்தை சுற்றி புறம்போக்கு நிலத்திலுள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றி பாதை அமைக்கப்படாததால், இந்த பகுதி மக்கள் போக்குவரத்துக்கு வழியின்றி அவதிக்குள்ளாகினர்.

இந்தநிலையில் இந்த பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் இறந்து போனதால், அவரது உடலை மயானத்திற்கு எடுத்துச் செல்ல வழி இல்லாததால், ஏரி புறம்போக்கு நிலத்திலுள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றி பாதை அமைத்துத் தர நடவடிக்கை எடுக்கக் கோரி, இப்பகுதி மக்கள் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி கடந்த 3-ந் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நேற்று காலை வாழப்பாடி தாசில்தார் கோபலகிருஷ்ணன் தலைமையில், துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சக்கரபாணி, இன்ஸ்பெக்டர் உமாசங்கர், துணை தாசில்தார் செல்வராஜ், பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், வருவாய் ஆய்வாளர் கார்த்திக், கிராம நிர்வாக அலுவலர் சக்திவேல் ஆகியோர் கொண்ட குழுவினர், பொக்லைன் எந்திரத்தை பயன்படுத்தி ஆக்கிரமிப்பு வீடுகள், கடை மற்றும் கொட்டகைகளை அகற்றினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வீட்டு உரிமையாளர்கள் சிலர், பொக்லைன் எந்திரத்திற்கு அடியில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பட்டா நிலத்துடன் இணைத்து கட்டப்பட்டுள்ள புறம்போக்கு இடத்திலுள்ள கட்டுமானங்களை அகற்றிக்கொள்ள அதிகாரிகள் கால அவகாசம் கொடுத்ததால் பிரச்சினை முடிவுக்கு வந்தது.

1 More update

Next Story