டிடிவி தினகரனை திவாலானவராக அறிவிக்க அமலாக்கத்துறை நடவடிக்கை: ஐகோர்ட்டில் தகவல்


டிடிவி தினகரனை திவாலானவராக அறிவிக்க அமலாக்கத்துறை நடவடிக்கை: ஐகோர்ட்டில் தகவல்
x

அன்னிய செலாவணி மோசடி வழக்கில் ரூ.31 கோடி செலுத்த வில்லை என்பதால் டி.டி.வி.தினகரனை திவாலானவர் என்று அறிவிக்க அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளதாக ஐகோர்ட்டில், மூத்த வக்கீல் கூறினார்.

சென்னை,

சென்னை சைதாப்பேட்டையைச் சேரந்தவர் பார்த்திபன். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

அ.ம.மு.க., பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக கூறி, அவருக்கு ரூ.31 கோடி அபராதம் விதித்து மத்திய அமலாக்கத்துறை இயக்குனர் கடந்த 1998-ம் ஆண்டு பிப்ரவரி 6- ந்தேதி உத்தரவிட்டார். இதை எதிர்த்து அன்னிய செலாவணி ஒழுங்குமுறை மேல்முறையீட்டு வாரியத்தில் டி.டி.வி.தினகரன் தாக்கல் செய்து மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் அவர் தாக்கல் செய்த வழக்கும் 2017-ம் ஆண்டு ஜனவரி 6-ந்தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.

வசூலிக்கவில்லை ஆனாலும், அவர் ரூ.31 கோடி அபராத தொகையை இதுவரை செலுத்தவில்லை. அவரிடம் இருந்து அபராதத்தை வசூலிக்க அமலாக்கத்துறை இயக்குனரும் ஆர்வம் காட்டவில்லை. டி.டி.வி.தினகரனிடம் அபராதம் வசூலிக்கப்பட்டதா? என்பது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை இயக்குனரிடம் மனு கொடுத்தேன். ஆனால், இதுகுறித்து விவரம் எதுவும் தர அமலாக்கத்துறை இயக்குனர் மறுத்து விட்டார்.

இதையடுத்து, டி.டி.வி.தினகரனிடம் அபராதத் தொகையை வசூலிக்கும்படி கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் 9-ந்தேதி அமலாக்கத்துறை இயக்குனருக்கு மனு அனுப்பினேன். இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, என் மனுவின் அடிப்படையில் டி.டி.வி. தினகரனிடம் அபராதத் தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட விட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ். வி.கங்கா புர்வாலா, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வக்கீல் ஏ.இளையபெருமாள் ஆஜராகி, ''டி.டி.வி.தினகரன் அபராதம் செலுத்தினாரா, இல்லையா? என்பதைக்கூட இதுவரை அமலாக்கத்துறை வெளியிடாமல் உள்ளது'' என்று வாதிட்டார்.

டி.டி.வி.தினகரன் தரப்பில் மூத்த வக்கீல் பி.குமார் ஆஜராகி, ''அபராதத்தொகையை வசூலிக்க அமலாக்கத்துறை இயக்குனர் சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுத்துள்ளார். இதை எதிர்த்து டி.டி.வி.தினகரன் வழக்குத் தொடர்ந்துள்ளார். மேலும், டி.டி.வி.தினகரனை திவாலானவர் என்று அறிவிக்கவும் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த நடவடிக்கை நிலுவையில் இருந்து வருகிறது'' என்று கூறினார்.

இதையடுத்து நீதிபதி, ''மூத்த வக்கீல் வாதம் மூலம் மனுதாரருக்கு தற்போது விளக்கம் கிடைத்து விட்டதால், இந்த வழக்கை முடித்து வைக்கிறோம்'' என்று உத்தரவிட்டனர்.


Next Story