அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கையில் அமலாக்கத்துறை...!


அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கையில் அமலாக்கத்துறை...!
x

அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமார் இருக்கும் இடம் குறித்து அமலாக்கத்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த 14-ம் தேதி அதிகாலை கைது செய்தது. அவரை கைது செய்தபோது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்ட நிலையில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் காவேரி மருத்துவமனையில் மருத்துவக்குழு கண்காணிப்பில் இருந்து வந்தார்.

இதனிடையே, செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை சட்டவிரோதமாக கைது செய்துள்ளதாகவும் அவர் சட்டவிரோதமாக காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறி அவரது மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை சட்டப்படியே கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு எந்த தடையும் கோர முடியாது, விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்.

தான் குற்றம் செய்யவில்லை என்பதை செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும்.செந்தில் பாலாஜி சட்டத்துக்கு உட்பட்டவர் தான். கைது செய்யப்பட்டவர்களை விசாரணை அதிகாரிகள் விசாரணை காவலில் எடுக்க வேண்டியது அவசியம் என்று உத்தரவிட்டது.

இந்நிலையில், காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து செந்தில்பாலாஜி புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.

இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு பல முறை சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் சம்மன் அனுப்பியும் அசோக்குமார் விசாரணைக்கு ஆஜராக வில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில், வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு அசோக்குமாருக்கு அனுப்பிய சம்மனுக்கான கால அவகாசம் முடிவடைய இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அவர் ஆஜராகாததால் அமலாக்கத்துறை அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஒரு மாத காலத்துக்கும் மேலாக அசோக்குமார் தலைமறைவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக சுமார் 20 பேர் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளதாகவும், மேலும் 20 பேர் சம்மன் அனுப்பியும் அஜராகாமல் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை அடிப்படையாக வைத்து பல்வேறு பரிவர்த்தனைகள் தொடர்பாக விளக்கம் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Next Story