மணல் குவாரிகளில் டிரோன் கேமரா மூலம் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு


மணல் குவாரிகளில்  டிரோன் கேமரா மூலம் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 14 Oct 2023 6:45 PM GMT (Updated: 14 Oct 2023 6:46 PM GMT)

கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரிகளில் டிரோன் கேமரா மூலம் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

அமலாக்கத்துறை சோதனை

தமிழ்நாட்டில் ஆறுகளில் செயல்பட்டு வரும் மணல் குவாரிகளில் அரசு விதிமுறைகளின் படி மணல் அள்ளப்படுகிறதா? என்பது குறித்து மணல் குவாரிகளில் அமலாக்கத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி கொள்ளிடம் அருகே கொள்ளிடம் ஆற்றில் மாதிரவேளூர், பாலுரான்படுகை, பட்டியமேடு ஆகிய இடங்களில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் அரசின் மணல் குவாரிகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

டெம்போ வந்திருந்து வாகனங்களில் முப்பதுக்கு மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் மூன்று இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்புடன் நடைபெற்று வரும் சோதனையில் மணல் எடுக்கப்பட்ட இடம் அதன் பரப்பளவு, ஆழம் ஆகியவை குறித்து அளவீடு செய்தனர்.

டிரோன் கேமரா மூலம் ஆய்வு

மணல் குவாரி பகுதிக்கு வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் மணல் குவாரி செயல்பட்ட இடங்கள் குறித்த அடையாளம் இடப்பட்ட பகுதிகளில் அரசு நிர்ணயித்த ஆழத்தில் மணல் அள்ளப்பட்டுள்ளதா? என்பதை டிரோன் கேமராவை பறக்கவிட்டு படம் எடுத்தனர்.இதற்காக சக்தி வாய்ந்த டிரோன் கேமரா கொண்டு வரப்பட்டு இருந்தது.

அந்த டிரோன் கேமராவை கையாளுவதற்கு உரிய தொழில்நுட்ப வல்லுனர்கள் உடன் வந்து இருந்தனர். பின்னர் டிரோன் கேமரா மூலம் நிலபரப்பையும் ஆய்வு செய்தனர். சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக இந்த ஆய்வு நடந்தது. ஆய்வை முடித்துக்கொண்டு அவர்கள், தாங்கள் வந்த வாகனங்களில் அங்கிருந்து சென்று விட்டனர்.


Next Story