கிரேன் விழுந்து என்ஜினீயர் பலி - தந்தை கண்முன்னே இறந்த சோகம்


கிரேன் விழுந்து என்ஜினீயர் பலி - தந்தை கண்முன்னே இறந்த சோகம்
x

கும்மிடிப்பூண்டி அருகே தொழிற்சாலையில் நடைபெற்ற கட்டுமான பணியின்போது கிரேன் கவிழ்ந்து என்ஜினீயர் மீது விழுந்தது. இந்த விபத்தில் தந்தை கண் முன்னே மகன் பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு அருகே உள்ளது தேர்வாய்கண்டிகை கிராமம். இங்கு உள்ள தொழிற்சாலை ஒன்றின் கட்டுமான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இங்கு ஒப்பந்த அடிப்படையில் கடலூரைச் சேர்ந்த கருணாகரன் (வயது 53) என்பவர் மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார்.

அதேபோல அவரது மகன் நடராஜன் (22) என்பவரும் ஒப்பந்த அடிப்படையில் என்ஜினீயராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் தொழிற்சாலையில் கட்டுமான பணிகள் என்ஜினீயர் நடராஜன் மேற்பார்வையில் நடைபெற்றது. அப்போது நடராஜன் மீது எதிர்பாரத விதமாக கிரேன் கவிழ்ந்து விழுந்தது.

இந்த விபத்தில் தந்தை கருணாகரன் கண்முன்னே மகன் நடராஜன் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வரைந்த பாதிரிவேடு போலீசார் நடராஜன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசாா் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை முடிவடைந்து நடராஜனின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது கவன குறைவால் உயிரிழப்பு ஏற்பட்டதாக புகார் கூறி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், உரிய இழப்பீடு வழங்க கோரியும் உறவினர்கள் உடலை வாங்க மறுத்தனர். பின்னர் போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு பிறகு அவர்கள் நடராஜனின் உடலை பெற்று சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.


Next Story