தங்கும் விடுதியில் என்ஜினீயர் மர்ம சாவு


தங்கும் விடுதியில் என்ஜினீயர் மர்ம சாவு
x
தினத்தந்தி 22 Oct 2023 6:45 PM GMT (Updated: 22 Oct 2023 6:47 PM GMT)

வடலூரில் தங்கும் விடுதியில் என்ஜினீயர் மர்மமான முறையில் இறந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர்

வடலூர்,

தூத்துக்குடி மாவட்டம் மேல சண்முகாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜதுரை (வயது 28). என்ஜினீயர். இவர் கடந்த மாதம் 17-ந்தேதி கடலூர் மாவட்டம் வடலூருக்கு வந்தார். பின்னர் அங்குள்ள ஒரு தங்கும் விடுதியில் அறையெடுத்து தங்கினார். அப்போது தான், ஷேர் மார்க்கெட் அலுவலக பணியில் இருப்பதாக கூறி இருக்கிறார்.

தினசரி காலை 10 மணிக்கு வெளியே செல்பவர் மாலை 5 மணிக்கு விடுதிக்கு வந்துவிடுவார். சம்பவத்தன்று ராஜதுரையின் அறைகதவு திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள், இதுபற்றி வடலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், போலீசார் விரைந்து சென்று, கதவு பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, அங்குள்ள கழிவறையில், ராஜதுரை மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

போலீசார் விசாரணை

இதையடுத்து ராஜதுரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராஜதுரை தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story