கல்லூரி விடுதியில் என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை


கல்லூரி விடுதியில் என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை
x

படப்பை அருகே கல்லூரி விடுதியில் தங்கி இருந்த என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் அலோக்குமார் (வயது 19). இவர், காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். அவர், கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார்.

கடந்த 11-ந் தேதி முதல் செமஸ்டர் தேர்வு விடுமுறை என்பதால் விடுதியில் உள்ள மாணவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டனர். அலோக்குமார் தனக்கு விமான டிக்கெட் கிடைக்காததால் கல்லூரி நிர்வாகத்திடம் அனுமதி கேட்டு விடுதியிலேயே தங்கி இருந்தார்.

விடுமுறை முடிந்து நேற்று கல்லூரி திறப்பு என்பதால் சொந்த ஊர்களுக்கு சென்றிருந்த சில மாணவர்கள் நேற்று முன்தினம் இரவு கல்லூரி விடுதிக்கு வந்தனர். அப்போது அலோக்குமார் தங்கியிருந்த அறையில் இருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த மாணவர்கள் அறையின் கதவை திறக்க முயன்றபோது, கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது.

உடனே மாணவர்கள் சோமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு அலோக்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

மாணவரின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த சோமங்கலம் போலீசார், என்ஜினீயரிங் கல்லூரி மாணவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.


Next Story