வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் முகாம்; கலெக்டர் நேரில் ஆய்வு


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் முகாம்; கலெக்டர் நேரில் ஆய்வு
x

2,372 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் முகாம் நடைபெற்றது. கலெக்டர் முருகேஷ் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை

இந்திய தேர்தல் ஆணையம் 1.1.2023-ம் நாளை தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் செய்யப்படும் என்று அறிவித்து உள்ளது. எனவே, வருகிற 30-ந்தேதி வரை வாக்காளர் பெயர் சேர்த்தல், திருத்தம் மற்றும் நீக்கல் பணிகள் நடைபெற உள்ளது.

மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், செங்கம், கலசபாக்கம், போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளிலும் 12-ந்தேதி மற்றும் 13-ந்தேதிகளிலும், 26-ந்தேதி மற்றும் 27-ந்தேதிகளிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் மற்றும் நீக்கல் செய்யும் பணிக்கான சிறப்பு முகாம்கள் அந்தந்த பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 2,372 வாக்குச்சாவடி மையங்களில் இந்த சிறப்பு முகாம் நடைபெற்றது. திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமை மாவட்ட கலெக்டர் முருகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் தொடர்பாக படிவங்கள் பெறும் பணிகள் நடைபெறும் விவரங்களில் அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

இதேபோல் மற்ற வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்ற சிறப்பு முகாம் வருவாய்த்துறை மற்றும் தேர்தல் பிரிவு அலுவலர்கள் நேரில் சென்று பார்வையிட்டனர்.


Next Story