ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை வெற்றி பெறச் செய்யுங்கள்- மார்க்சிஸ்ட் கட்சி வேண்டுகோள்


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை வெற்றி பெறச் செய்யுங்கள்-  மார்க்சிஸ்ட் கட்சி வேண்டுகோள்
x

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது.

சென்னை,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.சுகுமாறன் தலைமை தாங்கினார். கூட்டத்தில், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர்கள் பி.சம்பத், உ.வாசுகி, பெ.சண்முகம் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

* பிப்ரவரி 27-ந்தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவு தெரிவிப்பதுடன், தேர்தலில் மகத்தான வெற்றி பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பணியாற்றும்.

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வாக்காளப் பெருமக்களும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் மகத்தான முறையில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறது.

* அனைத்து அரசுத் துறைகளையும் தனியாருக்கு தாரை வார்க்கும் பா.ஜ.க. கோவில் நிர்வாகங்களையும், சொத்துக்களையும் தனியாருக்கு தாரை வார்க்க களமிறங்கியுள்ளது. அண்ணாமலையின் இக்கோரிக்கையை எதிர்த்து ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும், பக்தர்களும் கோவில் நிலங்களில் சாகுபடி மற்றும் குடியிருக்கும் பொதுமக்களும் கிளர்ந்தெழ வேண்டுமென கேட்டுக்கொள்கிறது.

* மக்களின் வாழ்க்கையை நாசமாக்கும் குட்கா, பான் மசாலா போன்ற பொருட்கள் மீது முழு தடை விதிக்க தேவையான சட்டத்திருத்தங்களை தமிழ்நாடு அரசும், மத்திய அரசும் அவசரமாக நிறைவேற்றிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறது.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story