உறிஞ்சிகுழி கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும்; கலெக்டர் உத்தரவு

கழிவுநீரை சுத்திகரித்து நீர்நிலைகளுக்கு அனுப்ப உறிஞ்சிகுழி கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்று கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டுள்ளார்.
கழிவுநீரை சுத்திகரித்து நீர்நிலைகளுக்கு அனுப்ப உறிஞ்சிகுழி கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்று கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டுள்ளார்.
ஆய்வுக்கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த மாதாந்திர ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் வளர்மதி பேசியதாவது :-
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 7 ஊராட்சி ஒன்றிய கிராம பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவைகளில் பிரதம மந்திரியின் ஆவாஸ் யோஜனா திட்டத்தில் வீடுகள் கட்டும் பணிகளில் 780 வீடுகள் கட்டப்படாமல் உள்ளது.
கடந்த மாதம் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் தெரிவித்ததை தொடர்ந்து கடந்த ஒரு மாதத்தில் 61 வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மற்றவை நிலுவையில் உள்ளது. ஆற்காடு வட்டாரத்தில் 183 வீடுகள் தொடங்கப்படவில்லை. வீடுகள் கட்ட முடியாத பயனாளிகள் குறித்து முறையாக விசாரணை செய்து அறிக்கை அளிக்க வேண்டும்.
திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் ரூ.39 கோடி மதிப்பீட்டில் கழிவுநீர் அகற்றும் பணிகளில் அனைவரும் கழிவுநீர் கால்வாய் பணிகளை முன்னிலைப்படுத்தி திட்ட அறிக்கையை கொடுக்கின்றனர். கழிவுநீரை வெளியேற்ற அந்தந்த குடியிருப்புகளில் உறிஞ்சிகுழிகள் அமைக்கும் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்க அரசு உத்தரவிட்டு உள்ளது.
உறிஞ்சிகுழிகள் அமைக்க முடியாத பட்சத்தில் மட்டுமே கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகளை தொடங்க வேண்டும். ஆகவே பொறியாளர்கள் இதை கருத்தில் கொண்டு இப்பணிகளை விரைவுப்படுத்த வேண்டும்.
கட்டிடப் பணிகள்
மேலும் கழிவுநீரை சுத்திகரித்து நீர்நிலைகளுக்கு அனுப்ப தேவையான உறிஞ்சிகுழி சுத்திகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இனிவரும் காலங்களில் நீர்நிலைகளில் மாசுப்படுத்துவதை தவிர்க்க அரசு உறுதி ஏற்று அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆகவே கழிவுநீரை வெளியேற்றும் நீர்நிலைகளுக்கு முன்னதாக கழிவுநீர் சுத்திகரிப்பு உறிஞ்சிக் குழிகளை அமைக்க ஆய்வு செய்து திட்ட அறிக்கை சமர்ப்பித்து பணிகளை தொடங்க வேண்டும். வருங்காலங்களில் இவைகள் அதிக அளவு கண்காணிக்கப்படும்.
நம்ம ஊரு சூப்பரு திட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் நடத்திடவும், மகளிர் சுய உதவி குழுக்களை கொண்டு குப்பைகளை தரம் பிரித்து வழங்கிடவும், கிராமத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது குறித்தும் ஒவ்வொரு வீடாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளையும் செய்ய வேண்டும்.
புதிதாக கட்டப்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, வகுப்பறை கட்டிடப்பணிகள், சமையலறை புனரமைக்கும் மற்றும் புதிதாக அமைக்கும் பணிகள் கால இடைவெளி தேவைப்படுவதால் ஜூன் 30-ந் தேதிக்குள் இப்பணிகளை முடிக்க கால் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆகவே இப்பணிகள் நல்ல முறையில் மேற்கொள்ளவும், விரைவாகவும், தரமாகவும் கட்ட வேண்டும்.
நர்சரி மையங்களில்...
நெமிலி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சமத்துவபுரம் வீடு கட்டும் பணிகள் ஜூன் மாதம் 30-ந்தேதிக்குள் முடித்திருக்க வேண்டும். இவைகளில் தொய்வு இருக்க கூடாது.
மே மாதத்திற்குள் அனைத்து நர்சரி மையங்களிலும் செடிகள் வளர்க்க நடவடிக்கை தொடங்கப்பட வேண்டும். 5 அடி வரை செடிகள் கட்டாயம் வளர்ந்து இருக்க வேண்டும். ஜூன், ஜூலையில் இச்செடிகளை நடவு செய்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆகவே இவற்றை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, செயற் பொறியாளர் முத்துசாமி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) குமார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள். பணியாளர்கள் கலந்து கொண்டனர்.






