ஏத்தன் வாழைப்பழம் விலை உயர்வு


ஏத்தன் வாழைப்பழம் விலை உயர்வு
x
தினத்தந்தி 25 May 2023 8:09 PM GMT (Updated: 26 May 2023 7:25 AM GMT)

திருவட்டார் பகுதியில் ஏத்தன் வாைழப்பழம் விலை உயர்ந்து கிலோ ரூ.50-க்கு விற்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கன்னியாகுமரி

திருவட்டார்,

திருவட்டார் பகுதியில் ஏத்தன் வாைழப்பழம் விலை உயர்ந்து கிலோ ரூ.50-க்கு விற்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஏத்தன் வாழைப்பழம்

குமரி மாவட்டத்தில் பரவலாக பயிரிடப்படும் வாழை இனங்களில் முக்கிய இடத்தை ஏத்தன் எனப்படும் நேந்திரன் வாழைப்பழம் பெற்றுள்ளது. இது காயாக இருக்கும் போது சிப்ஸ் தயாரிக்க பயன்படுத்தப் படுகிறது. ஏத்தன் வாழைப்பழம் சற்று கடினத்தன்மையுடன் இருப்பதால் ஆவியில் வேகவைத்தும், நெருப்பில் வேகவைத்தும் சாப்பிடுவது உண்டு. புட்டுடன் ஏத்தன் வாழைப்பழத்தை பிசைந்து சாப்பிடும் வழக்கம் உண்டு.

இந்தநிலையில் குமரி மாவட்டத்தில் திருவட்டார் உள்பட பல்வேறு இடங்களில் ஏத்தன் வாழைப்பழத்தின் விலை உயர்ந்து வருகிறது. இந்த பழம் கடந்த மாதம் வரை கிலோவுக்கு ரூ.40 வரை விற்கப்பட்ட நிலையில் தற்போது கிலோ ரூ.45 முதல் 50 வரை விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வெளி மாவட்டங்களில் இருந்து வருகை

இதுகுறித்து திருவட்டாரைச் சேர்ந்த வாழைக்குலை வியாபாரி பத்மராஜ் கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் பரவலாக ஏத்தன் வாழை பயிரிடுகிறார்கள். இதனை விரும்பி பயிரிட காரணம் மற்ற வாழையை விட பராமரிப்பது எளிது. அது மட்டுமல்ல நல்ல வாழைக்குலை சராசரி 15 முதல் 25 கிலோ வரை எடை கொண்டதாக இருக்கும். இதனால் விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். தற்போது விவசாயிகளிடம் இருந்து கிலோ ரூ.35 வீதம் நாங்கள் வாழைக்காய்கள் பெற்றுக்கொள்கிறோம். எங்களிடம் இருந்து சிறுவியாபாரிகள் கிலோ ரூ.40 வீதம் பெற்றுக்கொள்கிறார்கள். கடைகளில் கிேலா ரூ.45 முதல் ரூ.50 வரை விற்கப்படுகிறது.

கடந்த மாதம் வரை நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து குமரி மாவட்டத்துக்கு ஏத்தன் வாழைகள் வந்து கொண்டிருந்தது. இனிவரும் ஜூன், ஜூலை மாதங்களில் அங்கிருந்து ஏத்தன் வாழைகள் வரத்து குறையும்.

நல்ல விலை கிடைக்கும்

அப்போது இங்குள்ள வாழைக்குலைகளின் தேவை அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில் இங்குள்ள ஏத்தன் வாழை விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும். எனவே, ஜூன் மாதம் மேலும் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story